காந்தி கொலை செய்யப்பட்ட போது நேரு கூறியதை போல அவர் வாழ்ந்த வாழ்வின் தருக்கப்பூர்வமான உச்சக் காட்சியாகவே (climax) அவரது மரணம் நிகழ்ந்தது. அவரது மரணமும் கூட ரொம்பவும் கம்பீரமாகத்தான் நிகழ்ந்தது. பலருக்கும் வாய்க்காத மரணமல்லவா அது. கடைசி ஆண்டுகளில் காந்தியும் கோட்ஸேவும் ஒரே திசையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருந்தார்கள். கொலையை நோக்கி கோட்ஸேவும் கொலை செய்யப்படுதலை நோக்கி காந்தியும். தனது முடிவை பற்றி அவர் அறிந்தே இருந்தார். முதல்நாள் மாலை உட்படப் பலமுறை அவர் இதை சொல்லியிருந்தார். யாரோ சொன்னது போல காந்தியின் கொலை என்பது காந்தியும் கோட்ஸேவும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை.
- அ. மார்க்ஸ் (காந்தியும் தமிழ் சனாதனிகளும் [எதிர் வெளியீடு] நூல் முன்னுரையில் இருந்து)
வியட்நாம்
”பொண்ணே, உன் பேர் என்ன?” ”தெரியாது.”
”உன் வயசென்ன? எங்கிருந்து வர்ர?” “தெரியாது.”
”ஏன் இந்த குழிய தோண்டின? ” “தெரியாது.”
“எவ்வளவு நாளா ஒளிஞ்சிருக்க?” ”தெரியாது.”
”என் விரல ஏன் கடிச்ச?” ”தெரியாது.”
”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு? ” ”தெரியாது.”
“யார் பக்கம் இருக்க நீ? ” ”தெரியாது.”
“இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.”
”உன்னோட கிராமம் இன்னும் இருக்கா?” ”தெரியாது.”
”அவங்க உன்னோட குழந்தைங்களா? ”ஆமாம்.”- விஸ்லாவா சிம்போர்ஸ்கா
கவிஞர் குறித்து : http://en.wikipedia.org/wiki/Wisława_Szymborska
ஆங்கில மூலம் : http://theyeschurch.blogspot.com/2009/10/szymborska-vietnam.html
சிம்போர்ஸ்காவின் சில கவிதைகள் : http://info-poland.buffalo.edu/web/arts_culture/literature/poetry/szymborska/poems/link.shtml
தமிழில் : சித்தார்த்.
மரத்தில்எஞ்சியிருக்கும்கடைசி இலைக்குபெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா?வாய்க்கும்.உச்சிவெயிலில்தரையில் ஒரு சிற்றெறும்புநடந்துவருவதாய் வைத்துக்கொள்வோம்.காற்றில் ஆடியபடிதொடர்ச்சியாகஎறும்பின் பாதையில்நிழலிடஅந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.ஆட்டத்தின் உச்சத்தில்இலைமரத்தை விட்டு அகலலாம்.அப்போதும்,ஓர் குடையாய்எறும்பின் மேலேயேவிழ வாய்த்தால்,தாய் வந்துகுட்டியை ஒளித்ததற்காககண்சிவக்க கோபிக்கும் வரைஅந்த இருப்பு தொடருமானால்,அதுவேபெருமகிழ்ச்சி.- வீரன்குட்டி.
மலையாள மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=9993
தமிழில் : சித்தார்த்.
எளிமை
எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.நான் இங்கு இருந்ததை கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்புஇனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மைஎப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினை கூற?- பி. பி. இராமசந்திரன்
தமிழில் : சித்தார்த்.
மலையாள மூலம் : http://international.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=14010
சுயசரிதை – மிலொராட் பாவிச்
சில மாதங்களுக்கு முன்பு “அதிநாயகமாக்கம்” என்ற பதிவினை எழுதி இருந்தேன். அந்த பதிவை ஒரு நடை படித்துவிட்டு வந்தால் நல்லது. இல்லையென்றாலும் பாதகமில்லை. அந்த பதிவின் சாரம் இது தான். சங்ககாலத்தில் இருந்து இன்று வரை நம் சமூகம் “அதிநாயகர்களை” உருவாக்கியபடியே உள்ளது. ஔவை, வள்ளுவன், கம்பன் துவங்கி நம் கவிதைகள் முழுக்க இந்த அதிநாயகமாக்கத்தை காண்கிறோம். இராமன், காந்தி, ஒபாமா என அதிநாயகர்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் ஏதோ ஒரு தேவையை இந்த அதிநாயகர்கள் பூர்த்தி செய்கிறார்கள்.
அந்த பதிவினை ஒரு கேள்வியுடனேயே முடித்திருந்தேன்.
இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?
இது பல வருடங்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. அந்த கேள்வியை நினைக்கும் தோறும் ஒரு காட்சி தோன்றி மறையும். அருணாசலம் படம் வெளியாகி இருந்த நாள். முகப்பேர் பேருந்து நிலையம் அருகே ஒரு இளைஞர் கூட்டம் ரஜினியின் பெரிய படம் ஒன்றினை தங்களது தோளில் தூக்கி சென்றனர். யார் இந்த இளைஞர்கள். இவர்களுக்கு அந்த நடிகருக்குமான பந்தம் என்ன?
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே- ஔவையார் (புறநானூறு 87)
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.
ஔவை அதியமானின் பகைவரைக் கண்டதும், அவர்களை எச்சரிப்பதற்கான பிரக்ஞைபூர்வமான சொல்லாடல் அல்ல இது. மாறாக ஔவையின் சுயமோகத்தில் (Anaclytic Type) ஒரு பகுதியாக பங்கேற்றிருக்கும் அதியமானுக்கு ஏற்பட்ட காயமே, கிளர்ந்து ஒரு வானளாவிய வீரத்தைப் பகைவர் முன் தற்காப்பாக அவர்களை அச்சுறுத்த வைக்கிறது.
சாதி அரசியலை அல்லது மத அரசியலைத் தம் பகுதியாக கொண்ட தன்னிலைகள் எங்கோ நடப்பதை ஆய்வுக்குறிய எதுவும் இல்லாத போதும் தன் attachmentற்கு ஏற்ப நியாயப்படுத்தி பேசுவதைக் காணமுடியும். ரசிகர்களின் அரசியலும் இந்த வகை தான். தன்னையும், தான் ரசிக்கும் அபிமான நடிகரின் தொப்புள் கொடியில் கட்டுண்டு கிடப்பது பிரிக்கப்படவேண்டியது அவசியம் என்ற பிரக்ஞை இல்லாமல் இருப்பர்.
சுயமோக வெளியின் வானளாவியம் அத்தகையது. அறிஞனையும் ஞானியையும் ஏமாற்றக்கூடியது.
ராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக சொற்பமே.
பிரதீபன்
(1952) தூத்துக்குடியில் வங்கி அலுவலராக பணியாற்றுகிறார்.
நானா உன் எதிரி (1982), மொட்டை கோபுரம் (1989)
அவ்வளவே.
தொகுப்பில் பிரதீபனின் 11 கவிதைகள் தரப்பட்டிருந்தன. இவரது கவிதைகளில் தெரிந்த கச்சிதமும் கவிதையினூடாக காணக்கிடைத்த ஆளுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாதிரிக்கு, நான் ரசித்த மூன்று கவிதைகளை இங்கு இடுகிறேன்.
திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.
*
ஒளியை மட்டும்
உண்டு வாழும் புள்
ஓர்
அழகிய கற்பனை என்று
தோன்றாதா?எச்சிலும் மிச்சிலும் கொறித்துண்ண
இருளில் வந்து நடமாடி
சப்தம் கேட்ட மாத்திரத்தில்
பாய்ந்து சென்று
வளைக்குள் பதுங்கும் வாழ்வே
தான் என்று துலங்காதா?புள் அன்மை புரிந்தாலும்
ஊரும் நிலை ஓர்ந்தபின்னும்
கண்களால் வானம் தழுவி
களிக்கும் பழக்கம்
எதில் சேர்த்தி?
*
புனல் ஓடிப்போனப்பின்
வெண்மையாய்
மெத்துமெத்தென்று
மணல் பரந்து கிடந்தது
ஓடை;
பார்க்கப் பார்க்க
ஆசையாயிருந்தது குழந்தைக்கு;
சரி,
தன் காலைப் பதித்துத்
தடம் செய்ய வேண்டுமென்று
ஏன் தோன்றுகிறது.
இவரை பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்த இரு கவிதை தொகுப்புகளும் எங்காவது கிடைக்குமா இப்போது?

ரோபர்டோ யூரோஸ்
ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை சுவாசிக்க செய்கின்றது.
எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை மீண்டெழச் செய்கின்றது.
எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,
எல்லா மரணமும் இன்னொரு உரு.
ஆனாலும்,
இவற்றின் இணைவு
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.
- ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)
யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன : http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.
- கல்யாண்ஜி
(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது.
அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
)
கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.
வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்
யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.
இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.
“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”
காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.
“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.
பின்பு பலர் அழுதனர்.”
ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?
கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…
யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….
புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.
களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே
போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.
என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.
என்கிறார் வள்ளுவர்.
என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.
அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?





