ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்

Image

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ் 

சதுக்கத்தின் நடுவே
ஒரு மனிதன் மண்டியிட்டான்

— நிற்கவும் வலுவின்றி
களைத்துவிட்டானா?

- அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை
மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா?

- துக்கமெனும் சுத்தியினாலும்
வலியெனும் சுழற்காற்றினாலும்
தாக்கப்பட்டானா?

- தாங்கொணா பாரமாகிவிட்டதா?

- விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது
மரணத்தின் தூதுவனா?

- சாத்தானா அல்லது கடவுளா?

திடீரென சதுக்கத்தின் மத்தியில்
ஒரு மனிதன் மண்டியிட்டான்
கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென

ஆங்கில மூலம் : http://www.poetryinternationalweb.net/pi/site/poem/item/10599

அறவினை யாதெனின்…

இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் Game of Thronesநாவலில் வரும் ஒரு மன்னர் எட்டார்ட் ஸ்டார்க் (Eddard Stark). நாவலின் துவக்கத்தில் ராணுவத்தை விட்டு ஓடிய ஒருவனுக்கு அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை அளிக்கிறார். அவனது தலையை துண்டிக்கும் செயலை மன்னரே செய்கிறார். முடித்துவிட்டு மாளிகைக்கு திரும்பும் பொழுது அவரது பத்து வயது மகனுக்கு தன் செயலுக்கான காரணத்தை அவர் விளக்கும் வரி ஏதோ செய்தது வாசிக்கும் பொழுது :

”நீ ஒரு மனிதனின் உயிரை பறிக்க முடிவெடுக்கிறாயெனில் அவனை கண்ணோடு கண் நோக்கி அவனது கடைசி சொற்களை கேட்கும் கடமை உனக்கிருக்கிறது. உன்னால் அதை செய்யவியலாதெனில், அவன் ஒருவேளை இறக்க வேண்டியவனாக இல்லாமல் இருக்கலாம். 

கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்….”

***********

கசாபின் தூக்கு தண்டனை தீர்ப்பு இந்த வரியை நினைவுப்படுத்தியது. மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்பது அனைத்து சமூகப்பிரச்சனைகளை போலவே மிக சிக்கலான ஒரு பிரச்சனை.

மரண தண்டனை என்பது அடிப்படையில் சமூக கட்டமைப்பை சார்ந்த ஒரு விஷயம். இன்று சமூகம் என்ற பதத்தை பயன்படுத்துகிறோம். ஒரு காலத்தில் குழுநலன்/குழு ஒற்றுமை என்பதாக இருந்தது. மரண தண்டனை இரண்டு நிலைகளில் வேலை செய்வதாக படுகிறது. ஒரு நிலையில் அது குற்றம் நிகழாமல் தடுப்பதற்கான காரணியாக இருக்கிறது. மரணம் குறித்த அச்சம் குற்றத்தை தடுக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் அதை விடவும் முக்கியமாக சமூக கோவத்தின் வடிகாலாக மரண தண்டனை பயன்படுகிறது. கசாபின் மரணம் என்பது மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கோவத்திற்கான வடிகால். அதிகாரம் பரவலாக சிறுசிறு மக்கள் குழுக்களின் கைகளில் இருந்த பொழுது, தண்டித்தலுக்கும் மக்களுக்குமான நெருக்கம் மிக அதிகமாக இருந்த பொழுது ஊர்கூடி கல்லெரிந்து கொன்றோம். ஆனால் இந்த நூற்றாண்டில் நமக்கு நிகழ்ந்த இருபெரும் மாற்றங்கள் அதிகாரம் மையத்தை நோக்கி நகர்ந்ததும் தனிமனிதன் குறித்த பிரக்ஞை அதிகரித்ததும். ஒரு தனிமனிதனை தண்டனை என்ற பெயரில் கொல்வதற்கான அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தோ / பல்வேறு சிறுசிறு குழுக்களிடமிருந்தோ பறிக்கப்பட்டு ஒரு மைய அமைப்பிற்கு செல்கிறது.

இந்த நகர்வு மெல்ல வன்முறைக்கான தேவையை/பயன்மதிப்பை குறைத்துக்கொண்டே வருகிறது. நம் வரலாற்றில் இன்றை போல வன்முறை குறைவாக நிகழும், வன்முறை பரவலாக வெறுக்கப்படும் வேறோர் காலகட்டம் இருந்ததில்லை என்றே படுகிறது. வன்முறையின் உன்னதப்படுத்தப்பட்ட வடிவமாக ”வீரம்/மறம்” சென்ற தலைமுறையைவிட இந்த தலைமுறையில் குறைவாகவே மதிக்கப்படுகிறது. கழுவிலேற்றுவதை ஊரே சென்று பார்ப்பதும், ஊர் கூடி கல்லெரிந்து கொல்வதும் பொதுவழக்கமாக இருந்த காலகட்டத்தை தாண்டி வந்துவிட்டோம். ஒரு இனமாக நாம் மென்மேலும் உன்னதமாகிக்கொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். ஒரு சிறுகுழுவின் அங்கமாக மட்டுமே என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும் என்பதே சென்றகாலத்தில் ஒரு தனிமனிதனின் பொது மனநிலையாக இருந்தது. அங்கிருந்து மெல்ல நகர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையே மனித உரிமைக்கு இன்று உருவாகியுள்ள முக்கியத்துவம் காட்டுகிறது. இந்த பின்னணியில் மரண தண்டனைக்கான எதிர்ப்பு என்பது மிக இயல்பான ஒன்றே.

ஆனால் மரண தண்டனையே கூடாதா? என்ற கேள்விக்கு இன்னும் என்னிடம் தெளிவான விடை இல்லை. தனிமனிதனுக்கான ஒழுக்கவிதிகளே அரசுக்கும் என்பது ஒரு உன்னத நிலை தான் என்றாலும் யதார்த்தம் என்பது மிக சிக்கலானதல்லவா?

மரணதண்டனை எதிர்ப்பு என்பது மனித உயிரின் முக்கியத்துவத்தை அரசிற்கு முன் பறைசாற்றும் செயல். சமூக நலன் என்ற போர்வையில் தனிமனிதன் நசுக்கப்படுவதற்கு எதிரான கூக்குரல். இந்த எதிர்ப்பு தண்டிக்கப்பட்டவனின் மீதான இரக்கத்தில் இருந்து எழுவதில்லை. தண்டிப்பவனின் மீதான கண்காணிப்பு உணர்வில் இருந்து எழுவது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் நிலையாகிவிடக்கூடாதென்பதற்காக எழுவது.

மன்னன் எடார்ட் ஸ்டார்கின் வரி : கூலிக்கு கொல்பவர்கள் பின்னால் ஒளியும் மன்னன் ஒரு கட்டத்தில் மரணம் என்றால் என்ன என்பதை மறந்துவிடுவான்…

இந்த மறதி நிகழாதிருக்கவே, ஒவ்வொரு மரண தண்டனையில் பொழுதும் தண்டிக்கப்படுபவன் யாராக இருந்தாலும் அவன் குற்றம் என்னவாக இருந்தாலும் எதிர்ப்பு எழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஆகப்பெரிய விழைவு

இன்று எதேச்சையாக The Codeless Code  என்ற நல்ல தளத்தில் சென்று முட்டினேன். Koanகள் என்றால் ஜென் மதத்தில் சொல்லப்படும் தத்துவார்த்தமான சிறு கதைகள். இந்த தளத்தில் ஓர் கணினி நிறுவனத்தில் நிகழ்வது போல சொல்லப்படும் அழகான சிறு கதைகள் உள்ளன. வெறும் கணினி வல்லுனர்களுக்கான கதைகள் அல்ல இவை… அனைவருக்குமானது.

மிகவும் பிடித்த கதை ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன் :

ஆகப்பெரிய விழைவு 

திங்கட்கிழமையன்று ஓர் இளம் துறவி குரு பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?

பான்சன் சொன்னார் : அறியக்கூடியதனைத்தையும் அறிந்து, ஒருவன் எழுதிய நிரலை இதற்கு மேலும் நேர்த்தியாக்க முடியாது என்ற நிலையை அடைவது.

செவ்வாய்க்கிழமையன்று வேறொரு இளம் துறவி பான்சனிடன் கேட்டான் : குருவே, ஆகப்பெரிய விழைவாக எது இருக்க முடியும்?

பான்சன் சொன்னார் : எப்போதும் தன்னினும் அறிவார்ந்த நிரலாளர்கள் சூழ இருப்பது… அதன் மூலமாக தொடந்து கற்றுக்கொண்டே இருந்து நிலையினை அடைவது.

புதன்கிழமையன்று மூன்றாவது இளம் துறவி, மேற்சொன்ன இரு பதில்களும் ஒன்றிற்கு ஒன்று எதிரானவை என்பதை உணர்ந்தான்.

ஆம், என்றார் பான்சன்.

குருவினும் உயர்ந்த இடத்தில் தான் இருப்பதாக எண்ணிக்கொண்ட இளம் துறவி கேட்டான் : ஆகப்பெரிய விழைவை ஒருவன் அடைவது எப்படி?

எரிச்சலுற்ற பான்சன் சொன்னார் : திங்களன்று ஆகப்பெரிய எண் எது என்று கேட்கப்பட்டேன். செவ்வாயன்று அதன் பாதியளவு எண் எது என்று கேட்கப்பட்டேன். இரு கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆனால் உனக்கு, அந்த இரு எண்களில் ஏதேனும் ஒன்று வரை எண்ணவும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால், நாம் தொடங்குவதற்கும் நிலவே மண்ணாகிவிடக்கூடும்.

இளம் துறவி வெட்கி தலைகுனிந்து சென்றான்.

பான்சனின் மேஜை மேலிருந்த போன்சாய் மரத்தில் களையெடுத்துக்கொண்டிருந்த தோட்டக்காரர் கேட்டார் : அந்த இளம் துறவியிடம் தவறிருப்பதாக எனக்கு படவில்லை. உங்களிடம் கேட்கப்பட்ட இரு கேள்விகளும் ஒன்றே அல்லவா?

பான்சன் சொன்னார் : போன்சாய்க்கு நீர் தேவை. என் சன்னலுக்கு வெளியே இருக்கும் தேக்கு மரத்திற்கும் நீர் தேவை.

ஆங்கில மூலம் : http://thecodelesscode.com/case/46

முன்றிலில் ஒரு புதிய கட்டுரை

அணிலாடு முன்றில் குறித்து முன்னமே எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் மனைவி காயத்ரியும் நானும் இணைந்து எழுதும் வலைப்பதிவு. பழந்தமிழ் பாடல்களை மட்டுமே மையமாக கொண்ட கட்டுரைகள் என்பது இலக்கு. இது வரை 14 கட்டுரைகள் எழுதியுள்ளோம். 

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு முன்றிலில் ஒரு புதிய கட்டுரையை எழுதினேன்… “நல்கார் நயவாராயினும்…”

பனிப்பொழிவிலிருந்து பறவையின்மையை…

நேற்று பி.பி.சியில் நீர்வளம் குறித்த கலந்துரையாடல். நீர்வள நிபுணர்கள், சூழலியல் அறிஞர்களிடையே ஒரு ஓவியரும் இடம்பெற்றிருந்தார். பெண். பெயர் மறந்துவிட்டது. சமூக, அரசியல் நோக்கில் மற்ற அனைவரும் பேசிய பொழுது இவர் இலக்கியத்தையும் கலையையும் முன் நிறுத்தி பேசினார். அவர் முன்வைத்த நீர் குறித்த இரு மேற்கோள்கள் இன்னும் ear wormஎன நினைவில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

When you look at your reflection in the water, do you see the water in you?

இந்த வரி நேற்றிரவில் இருந்து படுத்தி எடுக்கிறது…. நீ நீரில் உன் பிம்பத்தை காணும் பொழுது உன்னுள் இருக்கும் நீர் தெரிகிறதா?….

இன்னொரு வரி, எமிலி டிக்கின்சனின் கவிதையில் வரும் வரி…

Water is taught by thirst.

ப்பா… என்றிருந்தது…என்ன ஒரு வரி… இந்த வரி இடம்பெற்ற முழு கவிதை :

Water, is taught by thirst.
Land—by the Oceans passed.
Transport—by throe—
Peace—by its battles told—
Love, by Memorial Mold—
Birds, by the Snow.

அருமையான கவிதை…. இன்மையில் நின்றபடி இருப்பை நோக்குதல்… தாகத்திலிருந்தபடி நீரை, போரிலிருந்தபடி அமைதியை, பனிப்பொழிவில் நின்றபடி பறவையை…

ஒரு வகையில் மிகப்பழமையான கவிதைக்கருவி இது… எனக்கு மிகப்பிடித்த குறுந்தொகை பாடல்களில் ஒன்றான காலே பரிதப்பினவே நினைவுக்கு வருகிறது…

காலே பரிதப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந்தனவே
அகலிரு விசும்பின் மீனினும் பலரே
மன்ற இவ்வுலகத்து பிறரே

கால்கள் வழிவிழந்தன… கண்கள் பார்த்துப்பார்த்து பூத்துப்போயின… வானத்தின் விண்மீன்களை விடவும் அதிகமாக இருக்கிறார்கள் இவ்வுலகில் மற்றவர்கள்…

தேடலையும் அத்தேடலில் கண்ட மற்றவர்களையும் மட்டுமே குறிப்பிட்டு, இந்த இருப்பில் நின்றபடி தேடப்படும் நபரின் இன்மையை சுட்டும் கவிதை…

Birds, by the Snow… பனிப்பொழிவு பறவைகளை நினைவுப்படுத்துகிறது… நமக்கு துணையில்லா தனிமையை கார்காலம் ஊதிப்பெருக்குவது போல அமெரிக்கர்களுக்கு பனிக்காலம் போலும்…

இன்னொன்றும் தோன்றுகிறது. விண்மீன்களை தெளிவாகக்காண நகரத்து வெளிச்சங்கள் ஏதும் இல்லாத இரவு தேவைப்படுவது போல பறவைகளற்ற தூயவெள்ளை வானம் தேவைப்படுகிறதா பறவைகளை நினைவுகூற?

கதையின் கதை (அ) கொசுவத்திச்சுழற்சி :)

ஒரு விஷயத்தை பற்றி யோசித்தால் சிந்தனை அப்படியே கிளைத்து கிளைத்து வேறு எங்கோ போய் முடியும் எனக்கு. கட்டுரை எழுதுவதே கூட தோன்றியதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு பிறகு கோர்த்தெடுத்து தான்… ஆக என்னால் கதையெல்லாம் எழுத முடியாது என்று தெளிவாகவே தெரியும். ஆனாலும் ஒரு சின்ன உந்துதல் இருந்துகொண்டே இருந்தது, சிதறிய வடிவத்திலேயே ஒரு கதை எழுதிப்பார்த்தால் என்ன என்று…

எழுத நினைத்த கதையின் கரு இது தான் :

எதிர்கால தமிழ்நாடு (தனி நாடு). அதன் பிரதான மதம் குமரம். இம்மதத்தின் வளர்ச்சியும் தமிழக இனம் சார்ந்த அரசியலும் பின்னிப்பிணைந்தவை. ஒன்று மற்றதன் சாய்மானம் என்பது போல… அம்மதத்தின் அச்சாணியாக விளங்கும் நம்பிக்கைகளில் ஒன்று நவீன குமரமதத்தை தோற்றுவித்தவராக கருதப்படும் முதலாம் வேழன் குமரனடியின் மரணமும் அதை சூழ்ந்துள்ள அதிசயத்தன்மையும். இவர் வழிவந்தவரான இன்றைய வேழன் குமரனடியின் மரபணுக்களை, மரபணு வரலாற்றியல் என்ற புதிய அறிவியல் துறையின் உதவியுடன் ஆராயும் ஆராய்ச்சியாளர் ஒருவர் முதலாம் குமரனடியின் உடல்நலம் குறித்த, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையையே ஆட்டிவைக்கக்கூடிய, உண்மையினை கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்பை அரசியல் தலைமையும் எதிர்ப்பு போராட்டக்குழுவும் எப்படி கைப்பற்ற நினைக்கின்றன என்பதை குறித்த சிதறிய வடிவ கதையாக எழுத நினைத்தேன்….. அதாவது தமிழக அரசியல் நிலை குறித்த கட்டுரையின் ஒரு பகுதி… குமரமதத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவலின் ஒரு பக்கம், மரபணு வரலாற்றியல் குறித்த பேட்டியின் ஒரு சிறு பகுதி என்று போன்றவற்றின் தொகுப்பாக நியூ யார்க்கர் இதழில் வெளிவந்த ஒரு ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு என்ற வடிவில்…. கொஞ்சமாக எழுதவும் துவங்கினேன்.

கதைக்கருவை படிக்கும்பொழுதே உங்களுக்கு தோன்றியிருக்கும். அப்படியே அப்பட்டமாக கிருத்துவ மத அரசியலை பேசும் படைப்பாக வந்திருக்கும். Dan Brown பாதிப்போ என்னவோ… இப்படி தோன்றியவுடன் எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டேன். ஆனால், மேற்கோள்கள் மூலமாக மட்டுமே கதை சொல்லும் உத்தி, மரபணு வரலாற்றியல் ஆகிய அம்சங்கள் பிடித்திருந்ததால் ஜெயமோகனின் “தமிழிலக்கியம் : நேற்று இன்று நாளை” கதையின் வடிவில் எழுதிப்பார்க்கலாம் என்று நினைத்து எழுதியது ”பேசுதல் அதற்கின்பம் – நூல் வரலாறு” கதை. அப்போது அறிவிக்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டிக்கு அனுப்பி, முதல் பட்டியலில் கூட இடம் பெறாததால் அப்படியே விட்டுவிட்டேன்.

இன்று என் ஆதர்சமான ஜெயமோகன் இதை பகிர்ந்திருந்தது மிகுந்த நிறைவினை அளிக்கிறது…. it made my day. :) நன்றி ஜெ.

 

கீழே உள்ளது எழுதி நிறுத்திய அந்த கதை :)

 

***************

 

[கதையின் பெயர்]
[helper timeline : கட்டுரை காலம் : 2299;மொழிபெயர்ப்பு காலம் : 2380;தமிழகம் - உருவாக்கம் : 2080]

மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் :

* நியூ யார்க்கர் எனும் ஆங்கில மின்னிதழின் 2199ஆம் ஆண்டு நவர்பர் மாத (திருவள்ளுவர் ஆண்டு 2230, ஐப்பசி) பதிப்பில் வெளி வந்த “DNA and the God of Tamil land” என்ற தொகுப்புக்கட்டுரையின் மொழியாக்கம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த கட்டுரையை உள்வாங்கிக்கொள்ள தொகுப்புக்கட்டுரை என்றால் என்ன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். தொகுப்புக்கட்டுரை என்பது 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பின்நவீனத்துவ எழுச்சியின் நீட்சியாய் உருவான இலக்கிய வடிவம் ஆகும். இலக்கியத்தில் புதிதாய் கூறுவதற்கு எதுவும் இல்லை என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்டுரை எதை கூற முயல்கிறதோ அதை குறித்த பல்வேற மூலங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்களை மட்டுமே அடுக்கி அதன் மூலம் கருத்தை நிறுவுவதே தொகுப்புக்கட்டுரையின் பாணி. தொகுப்புக்கட்டுரையாளனின் திறமை என்பது மேற்கோள் தேர்ந்தெடுப்பிலும் அவற்றை கலைத்து அடுக்கும் விதத்திலுமே உள்ளது. ஒரு வகையில் இது Collage வகை ஓவியம் போன்றது. பத்திகளாலான கொலாஜ். இவ்வடிவம் தமிழகத்தில் இருந்து தோன்றியது எனும் கூற்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அப்போதெல்லாம் மேற்கோள்களின் மூலங்களை குறிப்பிடும் பழக்கம் இல்லை என்பதால் இக்கருத்து இன்னும் சர்ச்சைக்குறியதாகவே உள்ளது.

* இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள திருவள்ளுவர் ஆண்டுகள், வாசகர்களின் புரிதலுக்காக மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது.

* ஆங்கில கட்டுரையில் பல பகுதிகள் தமிழில் வெளிவந்த கட்டுரைகள், பேட்டிகள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் ஆகும். அவை மூல வடிவில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 

*************

சிங்கம் துரத்துவது பசிக்காக, மான் ஓடுவது உயிருக்காக. எத்தனை அழகான சொற்றொடர். யார் கூறியது இதை? சினுவா ஆச்சிபி*? ஜீவாதாரப்போராட்டம் ஒன்றினை அழகியல் மிளிரும் சொற்றொடராக சுருக்கி விட்டோம். அல்லவா? எதை சாதித்தோம் இது கொண்டு? மானும் சிங்கமும் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டத்தை சாவித்துவாரம் வழியாக பார்ப்பதில் ஏன் இத்தனை கோவம் என்கிறீர்களா? ஏனெனில் அந்த மான் இந்த வரியை வாசித்தால் என்ன நினைக்கும் என உங்களுக்கு தெரியாது. நான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதால் எனக்கு தெரியும். அந்த வரியில் இல்லாதவற்றில் இருந்து துவங்கலாம் இந்த கதையை. என் நுரையீரல் கெஞ்சிக்கொண்டிருக்கிறது. கணுக்காலுல் நரம்புகள் முறுக்கிக்கொண்டிருக்கின்றன. வின் வின் என அங்கிருந்து ஊற்றெடுக்கும் வலி மூளையை மோதிச்சரிகிறது. உதடுகள் மீன் போல திறந்திருக்க, அதனூடாக நான் மூச்சு வாங்கும் ஒலி எனக்கே கேட்க சகிக்கவில்லை. வழியும் வியற்வை வாய் நுழைந்து கரிக்கிறது. அதோ புள்ளியாய் தெரிகிறார்கள் என்னை துரத்துபவர்கள். எனது சிங்கங்கள்…..

- வேழன் குமரனடி , உயிருக்காய் ஓடும் மான், பக் : 3. [Stag's run for life - Vezhan Muruganadi, oxford univ. press, 2091]

* சினுவா ஆச்சிபி – இருபதாம் நூற்றாண்டு நைஜீரிய* எழுத்தாளர்.

(* – நைஜீரியா – இன்றைய ஐக்கிய ஆப்பிரிக்க கூட்டமைப்பின் ஒரு பகுதி)

 

**********************

 

பேராசிரியர். பெருவழுதியுடன் ஓர் உரையாடல் : தமிழேறு நாளிதழிலிருந்து.

தமிழேறு : தமிழகம் தனி நாடாக உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இது உண்மையாகவே ஒரு வரலாற்று தேவையா? இதை தடுத்திருக்க முடியுமா? வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் உங்களின் கருத்து என்ன?

பேரா. பெருவழுதி: எனது “தமிழக உருவாக்கம் : வேரும் விழுதும்” என்ற நூலினில் இதை குறித்து விரிவாக பேசியுள்ளேன். இக்கேள்வியை இரண்டு விதங்களில் எதிர்கொள்ளலாம். முதலாவதாக தமிழகத்தின் உருவாக்கம் குறித்து பார்க்க வேண்டும். தமிழகம் அதிகாரப்பூர்வமான நாடாக உருவானது 2080 (தி. ஆ : 2111) ல் தான் என்றாலும் இதற்கான விதைகள் இதற்கு வெகு முன்னமே விழுந்து விட்டதற்கான சான்றுகள் பல, வரலாற்றில் காணக்கிடைக்கின்றன. 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சியும், அதன் நீட்சியாய் உருவான நிகழ்வுகளும் நேரடியாய் தமிழகம் உருவாக காரணமாக அமைந்தன. ஆனால் இதற்கு வெகு முன்னமே பிளவுகள் உருவாக ஆரம்பித்து விட்டிருந்தன. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கருநாடகம் என்ற மாநிலத்திற்கு (இன்றைய கீழை இந்தியாவின் 501 தொடங்கி 543 வரையிலான மாகாணங்கள்) எதிராக வெளியான பல மின்கட்டுரைகள் அன்றைய பொது மனநிலைக்கு காட்டாக அமைகின்றன. இந்தி மொழிக்கு எதிராக பல போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான குறிப்புகளும் கிடைத்துள்ளன. சுருக்கமாய் கூறினால், 2075ஆம் ஆண்டின் நீர்வறட்சி, மிகப்பெரிய நிகழ்வுச்சங்கிலி ஒன்றின் கடைசி கண்ணி மட்டுமே.

இரண்டாவதாக இதை தமிழக மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்று ஆழ்ந்து நோக்க வேண்டும் நாம். அவர்கள் இதை வரவேற்றார்கள் என்றே கூற வேண்டும்.தமிழர்களின் தனிப்பெரும் சமயமான குமர சமயத்தின் வளர்ச்சியே இதற்கு தக்க சான்று. முதலாம் வேழன் குமரனடியின் தலைமையில் குமரம் தனி சமயமாக உருவாவதற்கு வெகு முன்னமே அதற்கான வேர்கள் தமிழகத்தில் இருந்தன. குமரம் தமிழர்களின் ஆதி சமயம் எனும் உணர்வு என்றுமே தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு நமக்கு காட்டுவது. தமிழகம் தனி நாடாக ஆனது தமிழர் தமக்கான அடையாளத்தை மீட்டெடுத்ததன் விளைவே ஆகும்.