பிரதீபன் கவிதைகள்

2009 செப்டம்பர் 16
Siddharth ஆல்

ராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக சொற்பமே.

பிரதீபன்
(1952) தூத்துக்குடியில் வங்கி அலுவலராக பணியாற்றுகிறார்.
நானா உன் எதிரி (1982), மொட்டை கோபுரம் (1989)

அவ்வளவே.

தொகுப்பில் பிரதீபனின் 11 கவிதைகள் தரப்பட்டிருந்தன. இவரது கவிதைகளில் தெரிந்த கச்சிதமும் கவிதையினூடாக காணக்கிடைத்த ஆளுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாதிரிக்கு, நான் ரசித்த மூன்று கவிதைகளை இங்கு இடுகிறேன்.

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.

*

ஒளியை மட்டும்
உண்டு வாழும் புள்
ஓர்
அழகிய கற்பனை என்று
தோன்றாதா?

எச்சிலும் மிச்சிலும் கொறித்துண்ண
இருளில் வந்து நடமாடி
சப்தம் கேட்ட மாத்திரத்தில்
பாய்ந்து சென்று
வளைக்குள் பதுங்கும் வாழ்வே
தான் என்று துலங்காதா?

புள் அன்மை புரிந்தாலும்
ஊரும் நிலை ஓர்ந்தபின்னும்
கண்களால் வானம் தழுவி
களிக்கும் பழக்கம்
எதில் சேர்த்தி?

*

புனல் ஓடிப்போனப்பின்
வெண்மையாய்
மெத்துமெத்தென்று
மணல் பரந்து கிடந்தது
ஓடை;
பார்க்கப் பார்க்க
ஆசையாயிருந்தது குழந்தைக்கு;
சரி,
தன் காலைப் பதித்துத்
தடம் செய்ய வேண்டுமென்று
ஏன் தோன்றுகிறது.

இவரை பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்த இரு கவிதை தொகுப்புகளும் எங்காவது கிடைக்குமா இப்போது?

கவிதை – ரோபர்டோ யூரோஸ்

2009 செப்டம்பர் 9
Siddharth ஆல்
ரோபர்டோ யூரோஸ்

ரோபர்டோ யூரோஸ்

ஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,
ஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை சுவாசிக்க செய்கின்றது.

எல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,
எல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.
ஆனாலும்
இவற்றின் இணைவு
நமை மீண்டெழச் செய்கின்றது.

எல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,
எல்லா மரணமும் இன்னொரு உரு.
ஆனாலும்,
இவற்றின் இணைவு
நமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.

- ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)

யூரோஸின் சில கவிதைகள் இத்தளத்தில் உள்ளன : http://medusaskitchen.blogspot.com/2006/05/fleeing-toward-our-presence.html

அசாயலை அடைந்த பிள்ளையார் ;)

2009 ஆகஸ்ட் 24
Siddharth ஆல்

pillaiyaar

இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன்  முகம் செய்தேன்
முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்
இடையில்
இவள் சாயலில் இருக்கிறது
என்றார்கள்
இந்த முறை
உறவின் அடையாளங்களில் இருந்து
கழன்று ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம் சிரித்தது.
அசாயலை
அடைவதற்கு
ஆகிவிட்டது இத்தனை காலம்.

- கல்யாண்ஜி

(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்சள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. :)  அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். ;)  )

அதிநாயகமாக்கம்

2009 ஆகஸ்ட் 24
Siddharth ஆல்

கம்பராமாயணம் வாசித்துக்கொன்டிருந்த போது அயோத்தியா காண்டத்தில் இந்த பாடல் கண்ணில் பட்டது.

வாரணம் அரற்ற வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை’ என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி,
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார்

யானை கதறியபோது வந்து, முதலையை கொன்று யானையைக்காத்த நாராயணனின் கருணையை ஒத்தது இராமனது கருணை என்பார். நகைகள் ஏதும் தேவையற்ற இராமனை அணுகி நோக்கி, காரணம் ஏதும் இன்றியே கண்களில் நீர் வழிய நிற்பார்.

இராமன் முடிசூட்டிக்கொள்ள செல்லும்போது அவனை காணும் அயோத்தியா மக்களின் மனநிலையை விளக்கும் பகுதியில் உள்ள பாடல் இது. இதன் கடைசி வரி என்னவோ செய்துவிட்டது. காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார். ஏன் காரணமின்றி அழவேண்டும்? சாதாரண அயோத்தியாவாசிக்கும் இராமனுக்கும் என்ன சம்மந்தம்? இவ்வரியை படித்த போது ஜெயமோகன் சுந்தர ராமசாமியை குறித்து எழுதிய ”நினைவின் நதியில்” நூலினில் ஒரு பகுதி நினைவிற்கு வந்தது. காந்தியை பற்றி சுரா கூறியதாக ஒரு இடத்தில் எழுதி இருந்தார்.

“காந்தியை பத்தின நினைவுகள்ல ஒரு சம்பவம் எனக்கு மறக்காம இருக்கு. ஒரு ரூம்ல காந்தி ஒக்காந்திண்டிருக்கார். சுத்தி பெண்கள். அவாள்லாம் அழறா. உள்ள வர்ரவங்களும் அழறா. ஏன்னு தெரியாது. ஆனா அழறா. அவரை பாத்ததும் அப்படியே மனசு பொங்குது அவங்களுக்கு…”

காத்லீன் ஃபல்சானி என்ற அமெரிக்க பத்திரிக்கையாளரின் வலைப்பதிவில் கீழ்கண்ட வரி இருந்தது.

“கிராண்ட் பூங்காவில் செவ்வாய்கிழமை இரவு பத்து மணிக்கு வுல்ஃப் ப்லிட்சரின் குரல் “ஒபாமா தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்” என்று ஒலித்தபோது அங்கு குழுமியிருந்த அனைவரும் (பல பத்திரிக்கையாளர்கள் உட்பட) ஆராவாரம் செய்தனர்.

பின்பு பலர் அழுதனர்.”

ஒபாமாவும் கிட்டத்தட்ட இராமன் போல தான். இன்னும் எதுவுமே செய்யத்தொடங்கவில்லை. இனி தான் தெரியும் அவர் யார்… என்ன செய்யக்கூடியவர் என்று. காந்தியின் முன் அமர்ந்து அழுத இப்பெண்களுக்கு காந்தியின் தென்னாப்பிரிக்க வெற்றிகள், காங்கிரஸ் தலைமை செயல்பாடுகள், அவர் எழுதிக்குவித்த பல நூறு பக்கங்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. எனில் ஏன் அழ வேண்டும்?

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்திலேயே இன்னொரு பாடலில் ஒரு வரி வருகிறது. பொங்கிய உவகை வெள்ளம் பொழிதற…. உள்ளே பொங்கிப்பெருகும் மகிழ்ச்சி கண்களில் நீராய் வழிகிறது…

யோசிக்கையில் தோன்றுகிறது. தண்ணென்ற ஓர் ஆளுமைக்காக, வெயில்காய் நிலம் போல மக்கள் ஏங்கியபடி உள்ளனர். சாதாரண தண்மை இங்கு நொடிப்பொழுதில் உரிஞ்சப்பட்டு இல்லாதாகின்றது. ஆழம் வரை செல்லக்கூடிய, மனதையும் ஈரமாக்கவல்ல ஒரு நீர்சுனையை அவர்கள் தேடியபடியே, ஒரு அதிநாயகனுக்காய் ஏங்கிய படி உள்ளனர். அறம் பேணுவான் இவன் என அவர்களுக்கு தோன்றினாலே போதும், எம்முளும் உளன் ஒரு பொருனன் என்று உரக்கக் கூவி விடுவார்கள். கம்ப ராமாயணத்தில் பாடலுக்கு பாடல் இராமனின் பிம்பம் கட்டியெழுப்பப்படுகிறது. அவர் அறத்தான் என்பதே அப்பிம்பத்தின் ஆதாரம். வீரன் என்பதோ, சாந்தமானவன் என்பதோ அல்ல. அறத்தான் என நம்பத்தகுந்தவனை அதிநாயகனாய் பாவித்து பாவித்து எத்தனைப்பாடல்கள்…….

புறநானூற்றில் ஔவையின் பிரபலமான பாடல் ஒன்று உள்ளது.

களம் புகல் ஓம்புமின், தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால் அன்னோனே

போர்களம் புகாதீர் பகைவர்களே. எங்களுள் ஒரு பெருவீரன் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாளைக்கு எட்டு தேர்களை செய்யவல்ல தச்சன், ஒரு மாதம் உழைத்து தேர் சக்கரம் ஒன்றை செய்தால் அது எத்தனை வலியதாய் இருக்குமோ, அத்தனை வலியவன் அவன்.

என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்ஐ
முன்நின்று கல்நின் றவர்.

என்கிறார் வள்ளுவர்.

என் அரசனின் முன் நிற்காதீர்கள் பகைவர்களே. பலர் என் அரசனின் முன் நின்று இப்போது நடுகற்களாக நிற்கிறார்கள்.

அதிநாயகமாக்கம் இதை விட சிறப்பாய் தமிழில் வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.

இந்த அதிநாயக வேட்கையிலிருந்து தானா நமது சமூகத்து “தலைமை பிம்பங்கள்” தோன்றுகின்றன?

வென்றவர்கள்

2009 ஆகஸ்ட் 11
Siddharth ஆல்

வென்றவர்கள் – யோ ஃபெங்

எவரெஸ்ட் மீது ஏறியவர்களுள்
பலர் வழியிலேயே இறக்க
எஞ்சியவர்கள் சிகரமடைந்தனர்.
காமெராக்களை பார்த்தபடி கொடியசைத்தனர்.
அகில உலகமும் அறிந்துகொள்ளட்டும்
உலகின் பெருஞ்சிகரம் தங்களால் வெல்லப்பட்டதை.
காமெராக்கள் காட்டாது விட்டன
அமைதியாய் ஓரத்தில் நின்றிருந்த ஷெர்ப்பாக்களை.
அவர்கள் சுமைதூக்கிகள்
வென்றவர்களாய் கருதப்படுவதில்லை
இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தந்தால்
சோமோலுங்மாவை* வெல்ல
யாருக்கும் உதவுவார்கள் அவர்கள்.

சோமோலுங்மா – இமய மலையின் திபெத்திய பெயர்.

ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

கவிதையினூடே காணக்கிடைக்கும் வரலாறு…

2009 ஆகஸ்ட் 10
Siddharth ஆல்

”சங்க காலக்கவிதைகள் எதை குறித்து பேசும் போதும் மனதை பற்றியே பேசுகின்றன” என்று ஜெயமோகன் சங்கச்சித்திரங்களில் எழுதி இருந்தார். சங்க கவிதைகளுக்கு மட்டுமல்ல, இதுவே கவிதைக்கான பொதுப்பண்பு. கவிதை எதை பற்றி பேசினாலும் எத்தனை போலியாக/உண்மையாக இருந்தாலும் அது கவிஞனின் மனப்பதிவு தான். கவிதையின் பாடுபொருளாக வரலாறு ஆகும் போது என்னாகிறது? கவிதைக்கு (அல்லது இலக்கியத்திற்கு) வரலாற்றின் நிகழ்வுகளல்ல… விளைவுகளே முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் நுட்பமாக வரலாறு தத்துவமாக உருமாறியே கவிதைக்குள் நுழைகிறது.

சமீபத்தில் வரலாறை மையமாக கொண்ட சில கவிதைகளை வாசிக்க நேர்ந்தது. முதல் வாசிப்பிலேயே கவிதை என்ன சொல்ல வருகிறது என்பது “புரிந்துவிடுகிறது”. ஆனால் எதைப்பற்றி பேசுகிறது? இக்கவிதையில் குறிப்பிடப்படும் வரலாற்று நிகழ்வு என்ன? என எதுவும் தெரியாது. இருக்கவே இருக்கிறதே கூகுள். ஒரு நடை போய் தேடிப்படித்துவிட்டு வந்து மீண்டும் கவிதையை வாசித்தால்… மூக்குக்கண்ணாடி கடையினில் கண்ணாடியை மாற்ற மாற்ற காட்சியின் தெளிவு கூடிக்கொண்டே வருமே… அப்படித்தான் புரிதல் கூடிக்கொண்டே வந்தது.

Kerry Hardy எழுதிய “On Derry’s Walls” என்ற கவிதை.

டெர்ரியின் சுவரின் மேல்… – கெர்ரி ஹார்டி.

ஒரு பொருளை, அதனினும் நுட்பமான
ஒன்றை கொண்டே விளக்க முடியும்.
அன்பினும் நுட்பமான வேறொன்றில்லை.
எனில்
எதை கொண்டு அன்பை விளக்க?

- சும்னன் இப்ன் ஹம்சா அல்-முஹைப்

கல்லறைத்தோட்டத்தில் வாழும் கரும்பறவை
குளிர்கால நாளொன்றின் அந்தியில் சுவரில் வந்தமர்கிறது.
அது புழுக்களை தின்றிருக்கிறது.
புழுக்கள், இறந்த புரொட்டஸ்டண்ட்களின் களிமண்ணை.

ஆயினும் அப்பறவை நுட்பமானது.
பிரகாசமானதும் கூட.
அதை விளக்கும்,
விளக்கவியலா அன்பை போல.

மற்றவற்றை குறித்து ஏதுமில்லை சொல்ல,
“அது இப்படி தான் இருந்தது” கூட இல்லை.
ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே.

கரும்பறவையின் வளைந்த குடலினுள்
அனைத்தும் நிறைவுறுகின்றன.

ஆங்கில வடிவம் இங்கே

அயர்லாந்த் கவிஞர் கெர்ரி ஹார்டியின் இந்த கவிதையில்

”ஏனெனில் நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“அது இப்படி தான் எனக்கு தெரிந்தது” – என்பதை மட்டுமே”

(because all we can ever say
is This is how it looked to me – )

என்ற வரி தான் முதல் வாசிப்பில் என்னை ஈர்த்தது. வரலாறு என்பது நிகழ்வுகளின் ஒரு கோணம் மட்டுமே. நாம் நமதென கொள்ளும் அனைத்துக்கருத்துக்களும் கோணங்கள் மட்டுமே. நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம் “அது அப்படி தான் எனக்கு தெரிந்தது” என்பதை மட்டும் தான். இந்த வரி தான் என்னை இக்கவிதையை மொழிபெயர்க்க உந்தியது.

கவிதையின் பெயர் காரணம் பிடிபடவில்லை. எனக்கு அயர்லாந்து வரலாறு பற்றி ஏதும் தெரியாது. இஸ்ரேல் பற்றிய நாவல்களை எழுதிய லியோன் யூரிஸை தொடர்ச்சியாக படித்துக்கொண்டிருந்த காலத்தில் அயர்லாந்த் குறித்து அவர் எழுதிய Trinity வாசித்திருக்கிறேன். படித்ததில் பாதி புரியவில்லை. இக்கவிதையை மேலும் புரிந்துகொள்ள டெர்ரி குறித்து கூகுளில் தேடினேன்.

10ஆம் நூற்றாண்டிற்கு பின்னான அயர்லாந்த் ஒரு கத்தோலிக்க பகுதியாகவே இருந்து வந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிகழ்ந்த மத சீர்த்திருத்தங்களால் ப்ரோடெஸ்டண்ட் (சீர்திருத்தவாதம்?) கிருத்துவம் இங்கிலாந்தின் ஆதிக்க மதமாக உருகொள்கிறது. இதே காலகட்டத்தில் இங்கிலாந்த் அயர்லாந்தினுள் கால் வைக்கத்தொடங்குகிறது. அதை அயர்லாந்த் விரும்பவில்லை, எதிர்க்கிறது. பிரச்சனை கத்தோலிக்க மதம் – ப்ரோடஸ்டெண்ட் மதம் என்ற மத அடையாளத்தோடு தொடர்கிறது. கத்தோலிக்கர்களுக்கும் ப்ரோடஸ்டண்ட்களுக்குமிடையே நிறைய சண்டைகள் நிகழ்கின்றன. இரு பிரிவுகளுமே பெரும் இழப்பை சந்தித்துவிட்டனர். டெர்ரி நகரம் அயர்லாந்த் இங்கிலாந்த் எல்லையில் உள்ள நகரம் என்பதால் இந்நாடுகளின் வரலாறு டெர்ரியில் குவிமையம் கொள்கிறது.

இங்கே போர்களில் இறந்த ப்ரோடெஸ்டண்ட்களின் உடல் செறிந்த மண்ணை உண்டபடியே அமர்ந்திருக்கிறது கல்லறைத்தோட்டத்து பறவை. காலம் உறைந்து நிற்கும் அந்தப் பறவை நம் ”வரலாறு”களை எல்லாம் மெல்ல மெல்ல உண்டு செறித்துகொண்டிருக்கிறது.

தேவதேவனின் ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

ஒரு சிறு குருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்

நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை

ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.

தேவதேவனின் குருவியும் கெர்ரி ஹார்டியின் காக்கையும் காண்பது ஒன்றையே தான். தூரத்திருந்து பார்க்கையில் புலப்படும் நம் வாழ்வின் “சிக்கல்”களுக்கு பின்னிருக்கும் அபத்தம்.

பாரதியார் கதைகள்

2009 ஆகஸ்ட் 5
Siddharth ஆல்

தமிழ் இலக்கியவாதிகளின் வறுமைக்கு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக பாரதி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பாரதியாரின் கதைகளை படிக்கும் போது அவர் எவ்வளவு குதூகலமான மனிதராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. கீழ் வரும் பத்தியை பாருங்கள்…

மகாராஜ ராஜபூஜித மகாராஜ ராஜஸ்ரீ ராஜமார்த்தாண்ட சண்டப் பிரசண்ட அண்ட பகிரண்ட கவுண்டாதி கவுண்ட கடுண்டனூரதிப ராமசாமி கவுண்டரவர்களுக்கு வயது சுமார் ஐம்பதிருக்கும். நல்ல கறுநிறம், நரைபாய்ந்த மீசை, கிருதா, முன்புறம் நன்றாகப் பளிங்குபோல் தேய்க்கப்பட்டு, நடுத்தலையில் நவடு பாய்ந்து, பின்புறம் ஒரு சிறிய முடிச்சுப் போட்டு விளங்கும் முக்கால் நரையான தலை. நெடுந்தூரம் சூழ்ந்த கண்கள். இமைப்புரங்களில் ‘காக்கைக்கால்’ அடையாளங்கள். பொடியினால் அலங்கரிக்கப்பட்ட மூக்கு. வெற்றிலைக் காவியினாலும் புகையிலைச் சாற்றாலும் அலங்கரிக்கப்பட்ட பற்கள். குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல். பிள்ளை யார் வயிறு. ஒரு விதமான இருமல். அரையில் பட்டு ஜரிகை வேஷ்டி. விரல் நிறைய மோதிரங்கள். பக்கத்திலே வெற்றிலை துப்புவதற்கு காளாஞ்சி. ஒரு அடப்பைக்காரன் – இது தான் ராமசாமிக் கவுண்டர்.

பாரதி எழுதிய “சின்ன சங்கரன் கதை” என்ற முடிவுறாத கதையின் ஒரு பத்தி இது.தமிழ் சிறுகதைகளுக்கான முன்மாதிரியை பாரதியே ஏற்படுத்திக்கொடுத்தார் என்றார் யுவன் ஒருமுறை. இப்போது “பாரதியார் கதைகள்” (வானதி பதிப்பகம்) வாசித்துக்கொண்டிருக்கிறேன். அந்த கூற்று முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. கிண்டலும் குதூகலமுமான புதுமைப்பித்தனின் நடைக்கு பாரதியே முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்று படுகிறது. காக்காய் பார்லிமெண்ட் என்ற சிறிய கதையில் ஒரு பத்தி.

பக்கத்து வீட்டு மெத்தைச்சுவரின் மேல் நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மையில் சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றன. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்கிறேன். அதுபற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்கை பார்லிமெண்டைக் குறித்து தான் பேச்சு.

நன்றாக கவனித்தால் இரண்டாம் வரியில் “ஆதாரம் இருக்கின்றன” என்று பன்மையில் எழுதிச்செல்லும் அந்த நுண்ணிய நகையுணர்வு கண்ணில் படும். மொழியை கொண்டாட்டமாக மாற்றும் இந்த அம்சம் தான் புதுமைப்பித்தனில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அதற்கு 10, 15 வருடங்களுக்கு முன்பே பாரதி இதை எழுதி இருக்கிறார்.

சின்ன சங்கரன் கதை கௌண்டபுரம் என்ற ஊரைச்சேர்ந்த சங்கரன் என்ற சிறுவனின் கதை. சங்கரன் மழலைக்கவி. அந்த கால தமிழ்கவிதைகளின் பிரதான பாணியான காமரசம் சொட்டும் பாடல்களை கற்றுத் தேர்ந்து இளம்வயதிலேயே அது போன்ற கவிதைகளை எழுதவும் கற்றவன். ராமசாமிக் கவுண்டர் கவுண்டனூரின் அரசர், ஜமீன்ந்தார், திருமாலின் அவதாரம். இவரது அவைப்புலவர்களில் ஒருவனாக சின்ன சங்கரனும் சேர்கிறான். இவனுக்கும் அவையின் தலைமைப்புலவரின் மகளுக்கும் காதல் ஏற்படுகிறது. “இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான ஒர் செய்தி வந்துவிட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி.” என்ற வரியுடன் கதை முடிவுபெறாமலேயே நின்றுவிடுகிறது சிறுகதை.

அக்கால சிற்றரசர்களின் வெற்று ஆடம்பரங்கள், அவைப் புலவர்களின் உள்ளீடற்ற மொழி ஆகியவற்றின் மீதான பாரதியின் விமர்சனங்கள் எள்ளமும் கிண்டலுமாய் கதை நெடுகிலும் இருக்கிறது. இந்த விமர்சனம் அதன் உச்சியை அடைவது பின்வரும் பத்தியில்….

இப்படி தெருவில் கண்டவர்களை எல்லாம் மூன்று காசுக்காக புகழ்ந்து பாடுவது, பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக் கிழங்கைப் போலிருக்கிறது, மோவாய்க் கட்டையை பார்த்தால் மாதுளம்பழத்தைப் போலிருக்கிறது, கிழவியுடைய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற் கடலைப்போல் இருக்கிறது என்று திரும்ப திரும்பக் காது புளித்து போகிற வரையில் வர்ணிப்பது. யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாக பந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்பந்தங்களை கட்டி, அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தன் என்று மனோராஜ்யம் செய்துகொள்வது – இவை தான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்.

பாரதியாரின் கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்த அம்சம் அவற்றின் சரளத்தன்மை. தோன்றலுக்கும் இறுதி வடிவத்திற்கும் இடையே ஏதுமே நிகழவில்லை என்பதைப்போல அமர்ந்திருக்கும் கவிதை வரிகள். இதே சரளத்தன்மையை அவரது கதைகளிலும் காண முடிகிறது. வாக்கியங்களாக மாறாத சிறு சிறு சொற்சேர்க்கைகளின் மூலம் (குத்துயிரோடு கிடக்கும் உதடு. ஆபரணங்கள் பொருந்திய செவிகள். பூதாகரமான உடல்.) கதையை முன் நகர்த்தும் விதம், தமிழ் உரைநடை தன் மழலைப்பருவத்தில் இருந்த போது எழுதப்பட்ட கதைகள் இவை என்பதையும் மீறி ஒரு தற்காலத்தன்மையை மொழிக்கு அளிக்கிறது.

பாரதியார் சின்ன சங்கரன் கதையை ஒரு நாவலாகவோ அல்லது ஒரு பெருங்கதையாகவோ எழுதவே நினைத்தார் என்று தோன்றுகிறது. குறைந்த பட்சம் ஒரு தனி நூலாகவேணும் இதை வெளியிட நினைத்திருந்தார் என்பது இக்கதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் இருந்து தெரிகிறது. இப்பொழுதும் கூட ஒரு நல்ல சிறுகதையாக படிக்கலாம் இதை.

இப்போது பொதுபுத்தியில் உரைந்திருக்கும் முண்டாசு அனிந்து கொண்டு விரைப்பான தோரணையுடன் ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கும் அந்த ஒற்றைப்பரிமாண பாரதியை துரத்த பாரதியார் கதைகளை இலவசமாக வினியோகிக்கலாம்.

ஒளியை நோக்கி – சீனக்கவிதை

2009 ஜூலை 28
Siddharth ஆல்

ஒளியை நோக்கி
- யோ ஃபெங் (சீனா)
விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு
இனி இருள்
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து
இருளில் வசிக்கப் பழக்குவது?

முடிவற்ற பயிற்சிக்குப் பின்
அதன் சிறகுகள் முறிகின்றன
பறக்கவியலாது
அந்தியை இழுத்தபடி
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது
ஒளியை நோக்கி

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : சித்தார்த்.

கிளிகள் – ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ

2009 ஜூலை 27
Siddharth ஆல்

கிளிகள்
– ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ.

நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.Parakeet
இருட்டத்துவங்கியதும்
குரல் தாழ்த்தி
தம் நிழலுடனும்
மௌனத்துடனும்
உரையாடுகின்றன.

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
நாளெல்லாம் பேச்சு
இரவினில் துர்கனவுகள்.

அறிவார்ந்த முகத்தினில்
தங்க வளையங்களும்
அட்டகாசமான இறகுகளும்
இதயத்துள் ஓயாத பேச்சும்….

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
சிறப்பாய் பேசுபவை
தனி கூடுகளில்.

ஆங்கிலம் வழி தமிழில் : சித்தார்த்

பயமறியா ஜான் – இடாலோ கால்வினோ

2009 ஜூலை 19
Siddharth ஆல்
இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ

இடாலோ கால்வினோ இத்தாலிய இலக்கியவாதி. Invisible Cities, If on a winter’s night a traveller போன்ற நாவல்களையும் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர். Invisible Cities, தொலைந்த புலப்படாத நகரங்கள் என்ற பெயரில் (ச. தேவதாஸ் மொழிபெயர்ப்பு என நினைக்கிறேன்) தமிழில் வந்துள்ளது. இவர் எழுத்தாளராக மட்டுமல்லாது இத்தாலிய நாடோடிக்கதைகளை சேகரித்து தொகுத்து வெளியிட்டவரும் ஆவார். 1956ல் இவர் வெளியிட்ட Italian Folktales என்ற நூல் வாசிக்க கிடைத்தது. ஆங்கில நாடோடிக் கதைகளை க்ரிம் சகோதரர்கள் தொகுத்தது போல இத்தாலியில் செய்யப்படவில்லை. இக்கதைகள் தொலைந்துபோய் விடக்கூடாது என்ற முனைப்புடன் தான் இக்கதைகளை தொகுத்ததாக இதன் முன்னுரையில் கூறுகிறார். எனக்கு மாயக்கதைகள் என்றால் கொள்ளை இஷ்டம். நார்நியா, ஹாரி பாட்டர் தொடங்கி ஆர்டிமஸ் ஃபௌல் வரை எதையும் விடுவதில்லை.  பாடும் காக்காய்கள் பேசும் நரிகள் பேராசை பிடித்த ஆமைகள் வஞ்சக பாம்புகள் அன்பான சற்றே சற்று கர்வமுடைய முயல்கள் வாழும் மாய உலகிலிருந்தே கதை சொல்லுதல் நமக்கு அறிமுகமாகின்றன என்பதனாலேயே மாயக்கதைகளிலிருந்து நம்மை நம்மால் பிரித்துக்கொள்ள முடியவில்லை என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் அது மாயக்கதைகள் வாசித்தலுக்கு எதிரான செயலாக இருக்கும் என்பதனால், பேச்சை நிறுத்திவிட்டு, இத்தொகுப்பிலிருந்து ஒரு கதையை மொழிபெயர்த்து இங்கு இடுகிறேன்.

இத்தாலிய நாடோடிக்கதைகள்

இத்தாலிய நாடோடிக்கதைகள்


பயமறியா ஜான்.  – இடாலோ கால்வினோ

(தமிழில் : சித்தார்த்)
முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதை கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்த பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்கு பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய் தங்கிக்கொள்ளுங்கள்” என்றார்.

“நான் எதற்கு அஞ்ச வேண்டும்?”

“மக்கள் அந்த மாளிகையை பற்றி நினைக்க கூட அஞ்சுவர். அங்கு போன எவருமே உயிருடன் திரும்பியதில்லை. காலையில் தேவாலைய ஊழியர்கள் சென்று இரவு அங்கே தங்கச்சென்றவர்களின் உடல்களை எடுத்துக்கொண்டு வருவார்கள்”

என்ன செய்தான் ஜான்? வேறென்ன, கையில் ஒரு விளக்கு, வைன் புட்டி, கொஞ்சம் கோழி இறைச்சி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நேராக மாளிகை நோக்கி நடந்தான்.

நள்ளிரவில், மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து அந்த குரல் கேட்டது.

“அதை கீழே போடட்டுமா?”

“ம்ம். போடு” என்றான் ஜான்.

உடனே, புகைகூண்டு வழியாக ஒரு மனிதனின் கால் மட்டும் வந்து விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

இன்னொரு காலும் விழுந்தது. கோழி இறைச்சியை கொஞ்சம் கடித்துக்கொண்டான் ஜான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு” ஒரு கை வந்து விழுந்தது. ஜான் ஒரு ராகத்தை சீட்டி அடிக்கத்தொடங்கினான்.

“அதை கீழே போடட்டுமா?”

”தாராளமாக.” இன்னொரு கை விழுந்தது.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம்.”. ஒரு மனிதனின் உடல் மட்டும் கீழே விழுந்தது. கைகளும் கால்களும் அதனுடன் ஒட்டிக்கொள்ள தலையற்ற மனிதன் அங்கே நின்றுகொண்டிருந்தான்.

“அதை கீழே போடட்டுமா?”

”ம்ம். போடு”

கீழே விழுந்த தலை நேராக உடலில் போய் ஒட்டிக்கொண்டது. அந்த உருவம் ஒரு பூதமே தான். ஜான் தன் கோப்பையை அதன் திசையில் உயர்த்தி, “உனது ஆரோக்கியத்திகாக” என்றான்.

“விளக்கை எடுத்துக்கொண்டு என்னுடன் வா” என்றது பூதம்.

ஜான் விளக்கை எடுத்துக்கொண்டான். ஆனால் நகரவில்லை.

”நீ முதலில் நட” என்றது பூதம்.

“ம்ஹும். உன் பின்னால் வருகிறேன்” என்றான் ஜான்.

“முதலில் நீ” என்று உறுமியது பூதம்.

”நீ முன்னால் போ” என்று கத்தினான் ஜான்.

பூதம் முன்னால் நடக்க விளக்கை எந்தியபடியே ஜான் பின் தொடர, அவர்கள் ஒவ்வொரு அறையாக கடந்து கடந்து இறுதியில் ஒரு படிக்கட்டுக்கு கீழே இருந்த சிறிய கதவை அடைந்தனர்.

“அதை திற” உத்தரவிட்டது பூதம்.

“நீ திற” என்றான் ஜான்.

பூதம் தன் தோளால் முட்டி அக்கதவை திறந்தது. உள்ளே சுழற்படிக்கட்டுகள் தெரிந்தன.

“கீழே போ” என்றது பூதம்.

“உன் பின்னால்” என்றான் ஜான்.

அவர்கள் கீழே செல்ல அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. தரையில் கிடந்த ஒரு கல் பலகையை சுட்டி “அதை தூக்கு” என்றது பூதம்.

”நீ தூக்கு” என்றாரன் ஜான். பூதம் அதை ஒரு கூழாங்கல்லை தூக்குவதை போல எளிதாய் தூக்கி போட்டது.

கல்லின் கீழே தங்கக்காசுகள் நிறைந்த மூன்று குடங்கள் இருந்தன.

“அவற்றை மேலே தூக்கிச்செல்” என்று உத்தரவிட்டது பூதம்.

“நீ தூக்கிச்செல்” என்றான் ஜான். பூதம் ஒவ்வொன்றாக மேலே தூக்கிச்சென்றது.

அவர்கள் மீண்டும் மாளிகையின் கூடத்தை அடைந்த போது பூதம் கூறியது, “ஜான், சாபம் நீங்கிவிட்டது!”, இதை கூறியதும் அதன் ஒரு கால் மட்டும் தனியாய் பிரிந்து புகை கூண்டின் வழியே மேலேறியது.

”இதில் ஒரு பானை தங்கம் உனக்கானது. ” ஒரு கை பிரிந்து மேலேறியது. ”இரண்டாவது பானை, நீ இறந்துவிட்டாய் என்று நினைத்து உன் உடலை தூக்கிச்செல்ல காலையில் வருவார்களே, அந்த தேவாலைய ஊழியர்களுக்கு.” இன்னொரு கையும் பிரிந்து முதல் கையை தொடர்ந்து சென்றது. “மூன்றாவது பானை, உனை காண வரும் முதல் ஏழைக்கானது.” இன்னொரு காலும் பிரிய, பூதம் தரையில் கிடந்தது. ”இந்த மாளிகையை நீயே வைத்துக்கொள்”. தலையை பிரிந்த உடல் மேலேறிச்சென்றது. “இம்மாளிகையின் உரிமையாளர்களும் அவர்களது குழந்தைகளும் இனி திரும்பப்போவதில்லை”. இதை கூறியதும் தலையும் புகைக்கூண்டின் வழியே மறைந்துவிட்டது.

விடிந்த போது அந்த ஒலி எழுந்தது, “தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்.”. இறந்த உடலை தூக்கிச்செல்ல தேவாலைய ஊழியர்கள் வந்திருந்தனர். அவனோ சன்னலருகே நின்றபடி புகைபிடித்துக்கொண்டிருந்தான்!

பயமறியா ஜான் அந்த தங்கங்களினால் செல்வந்தனாகி அந்த மாளிகையில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தான். பின்னொரு நாள் பின்னால் திரும்பி தனது நிழலை பார்த்தான். பயத்தில் அந்த இடத்திலேயே அவனது உயிர் பிரிந்தது.