தமிழேறு பதிப்பகம் மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் இலக்கிய முன்னோடிகள் நூல் வரிசையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் நூல், மு. முத்தையன் எழுதிய “பேசுதல் அதற்கின்பம்”. இந்நூல், தமிழிலக்கிய வரலாற்று நோக்கில் மிக முக்கியமான நூலாகும். அரை நூற்றாண்டு காலம் உலக இலக்கிய சூழலில் மிக முக்கியமான வடிவமாக இருந்த கலவை இலக்கியம்(1) என்ற இலக்கிய வடிவத்தின் விதையாக திகழ்ந்த நூல் இது.
இந்நூலின் இலக்கிய மதிப்பீடுகள் குறித்து நிறையவே எழுதப்பட்டுவிட்டன. இந்த நூல் தமிழக இலக்கிய பரப்பில் செலுத்திய தாக்கத்தினை குறித்து இந்த சிறு கட்டுரையில் ஆராய விரும்புகிறேன். முதலில் சுருக்கமாக இந்நூலினை குறித்து பேசுவோம். 2035ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் வெளியானது. சங்க இலக்கிய பாடல்களில் இருந்து துணுக்குகளை அடுக்கி அடுக்கி செய்யப்பட்ட ஆக்கம் இந்த நூல். குறுந்தொகை தலைவி ஒருத்தியின் கேள்விக்கு நெடுநல்வாடையின் தலைவன் பதிலளிப்பான். அவனது பதிலை புறநானூற்று ஔவை மறுப்பாள். இந்த வடிவத்தில் 40 அத்தியாயங்களில் (ஒவ்வொரு அத்தியாயமும் ஓர் உணர்வை முன்வைக்கிறது) எழுதப்பட்ட நூல் இது. நூலின் முன்னுரையில் முத்தையன் கூறுகிறார் -
“என் இளமை பிராயம் முதல், சங்க இலக்கிய பாடல்கள் என்னுடன் உரையாடுவதாகவே எனக்கு தோன்றும். ஒவ்வொரு பாடலை வாசிக்கும் பொழுதும் பாணனும் பாணினியும் தோழனும் தோழியும் செவிலித்தாயும் தலைவனும் தலைவியும் என்னை நோக்கி ஏதோ சொல்வதாய்ப் படும். மனதினுள் நானும் அவர்களுடன் உரையாடுவேன். திடீரென ஒரு நாள் தோன்றியது, இந்த பாடல்கள், அதன் மாந்தர்கள், அதன் பருவநிலைகள், விலங்குகள், விழாக்கள் என யாவும் தத்தமக்குள் உரையாடினால் என்ன ஆகும்? இந்த எண்ணம் உதித்ததும், பாடலின் வரிக்கட்டுக்களை மீறி வெளியேற துடிக்கும் சிறைகைதிகளாக மாறிவிட்டனர் பாடலில் குடிகொண்ட அனைவரும். அவர்களை விடுவிக்கும் முயற்சியே இது.”
இன்று, வடிவ ரீதியிலும் வாசகப்பங்கேற்பு விகிதத்திலும் (2) (reader participation ratio) பின் தங்கிய படைப்பாக இந்நூல் பார்க்கப்படுகிறது. எனினும், இரண்டு விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒன்று, கலவை இலக்கியம் அதன் வடிவ நேர்த்தியை கண்டடையும் முன்பே வெளிவந்த படைப்பு இது. உதாரணமாக பிற்கால கலவைக்கட்டுரைகளின் உரைகல்லாய் திகழ்ந்த வாசக பங்கேற்பு விகிதம் போன்ற கருத்தாக்கங்கள் இந்நூல் உருவான காலத்தில் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இரண்டாவதாக, இன்று மரபணு வரலாற்றியல் என்னும் அறிவியல் துறையின் வளர்ச்சியினால், நாம் ஆயிரக்கணக்கான சங்ககால பாடல்களை மீட்டெடுத்துள்ளோம். ஆனால், இந்த நூல் எழுதப்பட்ட பொழுது சங்க இலக்கிய பாடல்கள் என்று வெறும் 2700 பாடல்களையே கூறிவந்தார்கள். இந்த 2700 பாடல்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு இன்றைய எந்த கலவை இலக்கிய படைப்பினோடும் ஒப்பிடக்கூடியதே என்பது எனது துணிபு.
முதன்முதலில் வெளியிடப்பட்ட போது இதை எந்த வகைமைக்குள் அடைப்பது என்பது தான் பெரிய பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். தமிழ் இலக்கிய சமூகம் இந்நூலினை மிக மௌனமாகவே முதலில் எதிர்கொண்டது என கணிக்க ஆதாரங்கள் இருக்கின்றன. 2035ல் வெளிவந்த நூலினை பற்றிய குறிப்பிடும்படியாக எழுதப்பட்ட முதல் கட்டுரை, மரவன்புலவு எழுதிய “பேசுதல் அதற்கின்பம் – வெட்டி ஒட்டுதல் கலை ஆகுமா?”. இது 2040ல் வெளியானது. ஐந்தாண்டு கால மௌனம். கட்டுரையில் நூலினை, அதன் அடிப்படையை மிக உக்கிரமாக நிராகரிக்கிறார் மரவன்புலவு. ஆனால் இந்நூலின் கலைமதிப்பு, அழகியல் ஆகியவை பெருவாரியான வாசகர்களை ஈர்த்தன என்பதை இக்கட்டுரைக்கு வந்த மறுப்புரைகள் காட்டுகின்றன. நோபல் பரிசு பெற்ற புனைவாளரான மிலோராட் பாவிச்சின் நாவல்களில் இருந்து உருவாக்கப்பட்ட “Tea with the Khazars” என்ற ஆங்கில கலவை நாவலை அமெரிக்க தமிழர் செந்தூரன் 2041ல் வெளியிட்டார். கலவை இலக்கியம் (Collage Literature) என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது இவரே. இந்நூல் ஐரோப்பாவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் கிட்டத்தட்ட 20 குறிப்பிடத்தக்க கலவை இலக்கிய நூல்கள் வெளியாயின. 2042ஆம் ஆண்டு பேசுதல் அதற்கின்பம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை Conversations across bariers (பெரும்பாலும், ஏ.கே. ராமானுஜனின் சங்கபாடல்களின் ஆங்கில மொழிப்பெயர்புகள் பயன்படுத்தப்பட்டன) என்ற பெயரில் வெளியிட்டார். இன்று உலக இலக்கிய சூழலில் தமிழ் மிக முக்கியமான இடத்தினை பெற்றிருப்பதற்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு பெரும் காரணமாகும். இம்மொழிபெயர்ப்பை தொடர்ந்து பல தமிழ் நாவல்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2060ல் செந்தூரனுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது நிகழ்த்திய உரையில் முத்தையனை நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழ் சமூக வரலாற்றில் இந்நூலின் தாக்கத்தை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தமிழகம் தனி நாடாக உருவானது தமிழர் வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வு. கடந்த நூறு ஆண்டுகளில் இந்நிகழ்வின் சமூக தாக்கங்கள் குறித்த பல்வேறு முக்கியமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இந்நோக்கில், தனி நாடு பிரகடனத்திற்கும், பேசுதல் அதற்கின்பம் நூல் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்பும் ஆய்வுக்குரியதே.
இத்தனை வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நூல் கடந்த 40 ஆண்டு காலமாக புழக்கத்தில் இல்லை. நாம் எந்த அளவிற்கு வரலாற்றுப்பிரக்ஞையற்று இருக்கின்றோம் என்பதற்கான சான்று இது. இதை வெளியிட்டதன் மூலம் தமிழேறு பதிப்பகம் தமிழ் சமூகத்திற்கு ஓர் முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளது. அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
- வெ. சித்தார்த் (அங்கிங்கெனாதபடி, ஜூன் 30, 2182).
பின்னிணைப்புகள் :
(1) கலவை இலக்கியம் என்பது பல்வேறு மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களை கலப்பதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். கலவை இலக்கியத்தின் மிக முக்கிய அம்சம், அதன் ஆசிரியர் தனது சொற்களை படைப்புக்குள் புகுத்தாதிருப்பதே. சொல்ல வந்த அனைத்தையும் பல்வேறு ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் மூலம் மட்டுமே சொல்ல வேண்டும்.
கலவை இலக்கியம் என்ற பொதுப்பகுப்பினுள் கலவை கட்டுரை, கலவை சிறுகதை, கலை புதினம், கலவை கவிதை என பல்வேறு விதமான இலக்கியப் படைப்புகள் உருவாகியுள்ளன. ஒரு கலவை காப்பியம் கூட எழுதப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “A Brief introduction to Collage Literature” கலவை இலக்கியம் பற்றிய சிறந்த அறிமுக நூல்.
(2) – வாசகப்பங்கேற்பு விகிதம் [வா.ப.வி] (Reader Participation Ratio [RPR]) : படைப்பு என்பது படைப்பாளியும் வாசகனும் இணையும் போதே உருவாகிறது என்ற வாதத்தின் நீட்சியாக உருவான அளவீடு, வாசக பங்கேர்ப்பு விகிதம். ஒரு படைப்பின் புரிதலுக்கு வாசக ஈடுபாடு எந்த அளவிற்கு தேவைப்படுகிறது என்பதை குறிக்கும் அளவீடு இது. இந்த விகிதத்தின் துணைகொண்டே புத்தகங்களின் வாசகபரப்பு தீர்மானிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில், வா.ப.வி யை அளவிட சொற்பரிச்சயம், கருத்துப்பரிச்சயம், சராசரி வாக்கிய நீளம் போன்ற பல்வேறு அளப்பான்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றைய வா.ப.வி அதன் ஆதி வடிவில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டது.
(3) – மரபணு வரலாற்றியல் : 21ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாக கொண்டாடப்படுவது மரபணு வரலாற்றியல். 2083யில் மு. குழந்தைவேலு மற்றும் இவானிச் இளியோர் கூட்டாக வெளியிட்ட நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சிக்கட்டுரை இத்துறையின் தொடக்கப்புள்ளி எனலாம். ஒவ்வொரு மனிதனின் மரபணுக்குள்ளும் அம்மனிதனின் மூதாதையர்கள் குறித்த தகவல்கள் பொதிந்துள்ளன என்று நிறுவி அதை பிரித்தெடுக்கும் வழிகளை கோட்பாட்டளவில் அளித்தது இக்கட்டுரை. இதன் துணை கொண்டு மனித வரலாறு குறித்த தகவல்களை மனித மரபணுக்களில் இருந்து தேடத்துவங்கினார்கள். மொழியியல் , குறியீட்டியல் , நரம்பியல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சியின் விளைவாக இந்த மரபணு தகவல்கள் மொழிவடிவமாக மாற்றப்பட்டன. இத்துறையின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் இலக்கிய ஆர்வலருமான மு. குழந்தைவேலு பழந்தமிழ் இலக்கியத்தினை மீட்டெடுக்கும் பணியின் ஈடுபடலானார். மதுரையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மரபணுவில் இருந்து கபிலரின் பாடல் ஒன்றினை குழந்தைவேலு 2098ல் மீட்டெடுத்தார். இவர் உருவாக்கிய “தமிழிலக்கிய மீட்புக்கழகம்” கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 50,000 பாடல்களை மீட்டெடுத்துள்ளது. இவற்றுள் 8539 பாடல்கள் சங்க இலக்கிய காலகட்டத்தை சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளன.
(உரையாடல் சிறுகதை போட்டிக்கான கதை).
பெருஞ்சித்திரனார் புறநானூற்றில் மொத்தம் 10 பாடல்கள் (158 – 163, 207,208,237,238) எழுதியுள்ளார். இதில் முதல் பாடல் (158) குமணன் என்ற அரசனிடம் பொருள் வேண்டி பாடப்பட்ட பாடல். கடையேழு வள்ளல்களின் பெயர்களை பட்டியலிட்டு “அவர்களெல்லாம் இறந்து விட்ட பிறகு புலவர்களெல்லாம் உன்னிடம் தான் வருகிறார்கள் என கேள்விப்பட்டு இங்கு உன்னிடம் வந்துள்ளேன்,” என்று கூறும் யாசகப்பாடல் தான் அது. கடையேழு வள்ளல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வரலாற்று ரீதியில் முக்கியமான பாடலாக இருக்கலாம். மற்றபடி வேறெந்த சிறப்பும் இப்பாடலில் எனக்கு தெரியவில்லை. ஆனால் அடுத்த பாடல் சட்டென வேறோர் தளத்திற்கு தாவி விடுகிறது. இதுவும் ஒரு யாசகப்பாடல் தான். ஆனால் தட்டையான, “எனக்கு ஏதாவது தா” என்ற தொனி இல்லை இப்பாடலில்.
புறம் 159 :
`வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின்,
தீர்தல்செல் லாது, என் உயிர்` எனப் பலபுலந்து,
கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி,
நூல்விரித் தன்ன கதுப்பினள், கண் துயின்று,
முன்றிற் போகா முதிர்வினள் யாயும்;பசந்த மேனியொடு படர்அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்ப்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்;என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை.
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
ஈத்த நின்புகழ் ஏத்தித், தொக்க என்,
பசிதினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப-உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதி யாயின், சிறிது
குன்றியும் கொள்வல், கூர்வேற் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல்-விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றல்! நிற் பாடிய யானே.
“என் வாழ்நாளைக் கடந்தும் பல ஆண்டுகள் உயிரோடிருக்கிறேன். இன்னும் என் உயிர் பிரியவில்லையே” என புலம்புகிறாள் என் தாய். ஊன்றுகோலை காலாக கொண்டு சிறு சிறு அடிகளாக நடக்கிறாள். நூலை விரித்தாற்போன்ற கூந்தல் அவளுடையது. கண் பார்வை மங்கியதால் முற்றத்திற்கு கூட செல்ல முடியாமல் கிடக்கிறாள்.
பிள்ளைப்பேற்றால் சோர்ந்த உடம்புடன் துயரத்தால் வருந்துபவள் என் மனைவி. இடுப்பில் இருக்கும் குழந்தைகள் பிசைந்து பிசைந்து வாடிய முலைகளுடையவள். குப்பைக்கீரையின் இளந்தளிரினை பறித்து உப்பு இடவும் வழியின்றி நீரையே உலையாக ஏற்றி காய்ச்சி சமைத்து மோரில்லாமல் உண்கிறாள். அழுக்கேறி கிழிந்திருக்கின்றன அவளது உடைகள். இருந்தும் இல்லற வாழ்வை பழிக்காதவள்.
இவர்கள் இருவரும் மகிழ வேண்டும்.
காட்டை எரித்த நிலத்தில் நடப்படும் பயிர் பசுமையாக வளர்ந்து, கோடையில் வாடுகையில், இழும் என்ற முழக்கத்துடன் மழை பொழியும் வானத்தை போல நீ தரும் பொருளால், பசியால் வாடிய என் சுற்றத்தார் உனை பாராட்ட வேண்டும்.
ஆனால் ஒன்று. அழகிய தந்தங்களை உடைய யானையையே எனக்கு பரிசாக தருவதானாலும் அதை அன்போடு தரவில்லையெனில் எனக்கு அது வேண்டாம். உள்ளத்தில் அன்புடன் நீ எனக்கு தரும் பரிசு மிகச்சிறியதானாலும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.
கூரிய வேலினைக்கொண்ட குமணனே, உன்னை பாராட்டி பாடிக்கொண்டிருக்கும் நான் பெருமைமிக்க ஓர் குடும்பத்தில் பிறந்தவன்.
பாடலின் முதல் பகுதி முழுவதும் வறுமையின் கொடுஞ்சித்திரம் சிறு சிறு குறிப்புகளின் மூலம் தீட்டப்படுகிறது. மரணத்திற்கான காத்திருப்பு , ஊன்று கோலுடன் சிறுசிறு அடிகளாலான நடை, நிறைய குழந்தைகள், பிசைந்து பிசைந்து வாடிய முலைகள், குப்பை கீரையின் சிறிய தளிர்களை உப்பும் மோரும் இன்றி சமைத்தல்…. பின் மழையுடன் குமணனை ஒப்பிடும் நான்கு வரிகள். இப்பகுதியை எழுதியது பெருஞ்சித்திரனார் என்ற தன் குடும்பத்து வறுமையை ஆற்றாமையுடன் நோக்கிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவனாகத்தான் இருக்க வேண்டும். ஈ என இரத்தலின் இழிநிலையில் வாடும் ஒரு பெருங்கவிஞன் இப்பாடலில் கடைசி பகுதியை எழுதுகிறான். ஆம். என் வீட்டில் சோறு கூட இல்லை. கீரையை நீரில் கொதிக்க வைத்து உண்கிறோம். அதனால் என்ன? இசைமேந்தோன்றல் உனை பாடிய யான். கவிஞன். எனக்குறிய கௌரவத்துடன் தா, தரும் பொருளை. அப்படி தருவதானால் சிறு பொருளை தந்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையா? பெரிய யானையையே கொடுத்தாலும் வேண்டாம்.
வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்கிறான் பாரதி. இசை மேந்தோன்றல் நினை பாடிய யானே என்கிறார் பெருஞ்சித்திரனார். கவிமனத்தின் உயரத்திற்கும் வாழ்வியல் அல்லல்களின் பள்ளத்திற்குமான இடைவெளியே இக்கவிதையின் கூரிய முரணாய் தெரிக்கிறது.
பெருஞ்சித்திரனாரின் கவிதைகளை வாசித்தபோது மு. சுயம்புலிங்கம் நினைவிற்கு வந்தார். இவர் எழுதிய மிக சில கவிதைகளையே படித்திருக்கிறேன். இருப்பினும் வறுமையை குறித்து எழுதும் கவிஞர் என்ற பிம்பம் என்னளவில் இவருக்கு விழுந்துவிட்டது. எப்போதோ படித்த ஒரு கவிதையில் வறுமையில் வாடும் மனைவியை பார்த்தபடியே நின்றிருப்பார். நைந்த புடவை, வாடிய உடல், ஒளியிழந்த கண்கள், நகை அணியாத கழுத்து கை காதுகள். தாலிக்கொடியில் இருக்கும் சிறு தங்க ஊக்கு கண்ணை பறிக்கிறது. கேட்கலாம் தான். கேட்டால் மறுப்பேதும் சொல்லாமல் கொடுத்தும் விடுவாள் தான். ஆனாலும்…. அறுந்த செருப்பை இழுத்து இழுத்து நடந்தபடியே கவிதையை விட்டு வெளியேறுவார் சுயம்புலிங்கம். வறுமையை பார்க்க நேரும் போதும் அது குறித்து படிக்கும் போதும் இந்த காட்சி வந்து மறையும்.
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது
இச்சையை தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்கு கிடைக்கும்
எங்களுக்கு கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.- மு. சுயம்புலிங்கம்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில், பார்த்த முதல் படம் எது என்பதெல்லாம் துள்ளியமாக நினைவிலில்லை. மிகச் சிறிய வயதிலேயே என்பது மட்டும் தெரியும். சிறுவயதும் சினிமாவும் என யோசித்தால் சில புகைமூட்டமான நினைவுகள் வருகின்றன. அப்போது நாங்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை என அருகருகே வீடு மாற்றிக்கொண்டிருந்ததால் தேவி திரையரங்கு வளாகமும் அங்கு பார்த்த (முப்பரிமான கண்ணாடியோடு) மை டியர் குட்டிச்சாத்தான், கிங் சாலமன்ஸ் மைன்ஸ், ஜாக்கி ஷராஃபின் ஹீரோ நினைவுக்கு வருகின்றன. வீட்டருகே இருந்த பாரகன் தியேட்டரில் பார்த்த பட்டனத்தில் பூதம், அல்லி ராஜ்ஜியம், மாயா பஜார் மற்றும் விட்டலாச்சாரியார் படங்களும். இன்றை போலவே அன்றும் கொண்டாட்டமான படங்களே பிடித்திருந்தன. பூவே பூச்சூடவா நானும் என் தங்கையும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்த படம்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
நேற்று முன் தினம் பார்த்த ராமன் தேடிய சீதை. படம் எனக்கு பிடித்திருந்தது.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சென்ற வாரம் வீட்டில் டிவிடியில் பார்த்த சரோஜா. பார்த்ததும் தோன்றியது… மிக மிக சிறிய படம். கால அளவை மட்டும் சொல்ல வில்லை. களமும் மிகச்சிறியது. நகைச்சுவையை எடுத்துவிட்டால் ஒன்றுமே எஞ்சியிருக்காது படத்தில். படத்தை மிகவும் ரசித்தேன் என்றாலும் எல்லா படங்களும் இப்படியே இருந்தால் Claustrophobicஆக உணர ஆரம்பித்து விடுவோம் என்று படுகிறது. தவமாய் தவமிருந்தேன் போன்ற ஒரு வாழ்கையை முழுவதுமாய் பார்க்கும் படங்களும் நமக்கு தேவை.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
மகாநதி. வறுமையின் நிறம் சிவப்பு. வீடு. தண்ணீர் தண்ணீர்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பு விவகாரம்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
அப்பு கமல். தசாவதாரத்தில் கடைசி சண்டை காட்சி. மை டியர் குட்டிச்சாத்தானில் ஐஸ் கிரீம் நீட்டப்படும் இடத்தில் என் கைகள் முன் இருக்கைகாரரின் தலையை தாக்கின. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் படுகிறது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வரலாற்றில் ஆர்வமுண்டு என்பதால் திரைப்படம் குறித்த வரலாற்று தகவல்களை (தியோடர் பாஸ்கரன், ஷாஜியின் கட்டுரைகள் போல) ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. நிழல், கனவுப்பட்டறை போன்ற திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்களும். தவிரவும் வாரஇதழ்களை (குமுதம், விகடன் இத்தியாதிகள்) வாங்கும் யாரும் திரைப்படம் குறித்த செய்திகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. வீடு தேடி வரும். என்ன… அது திரைப்படத்தை பற்றி இருக்காது. திரைப்படத்துறையையும் அதை சார்ந்தவர்களையும் குறித்த மீதகவல்களாக (metadata) மட்டுமே இருக்கும்.
7.தமிழ்ச்சினிமா இசை?
இசை எனக்கு அறிமுகமானதே சினிமா மூலமாக தான். ஆங்கில இசை புரிவதில்லை. கொஞ்சம் தள்ளி கிஷோர் குமார், ரஃபி, மகாராஜபுரம் என்று சென்றது கூட வெகு சமீபத்தில் தான். அதற்கு முன்பெல்லாம் இசை என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா தான். சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை ஏ. எம். ராஜா பற்றி ஷாஜி எழுதியது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திய மொழிப்படங்கள் எனில் மலையாளம் மிக அதிகமாக பார்ப்பதுண்டு (கடைசியாக பார்த்தது ஶ்ரீநிவாஸனின் அரபிகதா). சில வங்க மொழிப்படங்களை பார்த்ததுண்டு. இந்திய அளவில் அவ்வளவு தான். உலக மொழி படங்கள் மீது ஆர்வம் உண்டு. பருவத்திற்கு ஏற்ப பார்க்கும் மொழிகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரிய மற்றும் ஜப்பானிய படங்கள்.
அதிகம் தாக்கிய படங்கள் :
வாழ்வு அழிவை நோக்கி செல்லும் பயணம் என்ற பிம்பத்தை மிக அழுத்தமாக விதைத்ததற்காக - ஷேம் (ஸ்வீடன் – இங்க்மார் பெர்க்மன்). டர்டில்ஸ் கேன் ஃப்ளை (குர்த் – இரான் பஃமான் கோபாதி). ரான் (ஜப்பான் – அகிரா)
வாழ்வின் உன்னதம் என்று ஒன்றை காட்டியதற்காக – ரெட் பியர்ட், இகிரு (ஜப்பான் – அகிரா). சில்றன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் (ஈரான் – மஜித் மஜீதீ), அபுர் சன்சார் (வங்கம் – சத்யஜித் ரே).
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
மதுரைக்கு விமானத்தில் சென்ற போது எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி கஞ்சா கருப்பு பயணம் செய்தார். இது தான் சினிமாவுடனான எனது நேரடி தொடர்பு. ஒன்றும் செய்யவில்லை. அதுவாக நிகழ்தால் தடுக்க மாட்டேன். பட்டாம்பூச்சி சிறகசைத்தால் புயல் வருமாம். எனில் இதனாலும் ஏதேனும் நிகழாமல் போகுமா என்ன?
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மிக மிக நன்றாக இருப்பதாக. இந்த தலைமுறை தமிழகத்திற்கும் சென்ற தலைமுறை தமிழகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது என்பது கண்கூடு. கண்ணாடிக்குவளையின் மீது விஷம் என ஸ்கெட்ச் பேனாவினால் எழுதி ஒட்டி அதில் காமிராவை சூம் செய்யும் சேட்டையெல்லாம் நடந்திருக்கிறது நம் தமிழ் சினிமாவில் என்று யோசித்தால் இப்போது எவ்வளவு முன் நகர்திருக்கிறோம் என்று தெரிகிறது. கடந்த 2 – 3 ஆண்டுகளுக்குள் வந்துள்ள நல்ல படங்களின் விகிதம் தமிழ் சினிமாவிற்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை சுட்டுகிறது. (அதாவது ஏ.வி.எம் மீண்டும் ஒரு பெரிய பட்ஜட் மசாலா படம் ஒன்றை தயாரிக்காதிருந்தால்…)
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு வேளை நிகழ்ந்துவிட்டால்… என்று வைத்துக்கொள்வோம். தோனிக்கு கட் அவுட் வைத்து பால்/பீர்/காசு/துண்டு காகித அபிஷேகம், இளைய சிங்கம் பத்ரிநாத் நற்பணி மன்றம்….. நிகழலாம். சினிமா வேறு ஏதோ ஒன்றிற்கான வடிகால் என்று தான் தோன்றுகிறது. இது இல்லையென்றால் வேறு ஒன்று. தமிழர்களுக்கு எந்த அளவிற்கு மாறுதல் வரும் என்று தெரியவில்லை. மீண்டும் 7 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர்கதை பேசும் குடும்பத்தலைவர்கள், ஓடிப்பிடிச்சி, கண்ணாம்மூச்சி ஆடும் பொடிசுகள் உருவாகலாம். (பெண்களை நெடுந்தொடர்களிலிருந்து பெயர்த்தெடுத்தல் நிகழும் என படவில்லை).
நான் அழைக்கும் நால்வர் :
தேவர்மகன் படம் பார்த்த ஒரு வாரத்திற்கு அந்த நடுக்கம் இருந்தது. எனது வழமையான ”குருதி காண் அச்சம்” மட்டுமல்ல அது. சக்தியும் மாயனும் தத்தம் கைகளில் வாளுடன் நிற்கின்றனர். மாயனின் வாளை தடுக்க மட்டுமே எத்தனித்த சக்தியின் கை நழுவ… கீழே உருண்டோடுகிறது மாயனின் தலை. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் இக்காட்சி. “தலை உருளுதலுக்கு” எத்தனை அருகில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமே மயிர்கூச்செரிய செய்தது. எத்தனை முறை கையில் சிறு கத்தியுடன் விளையாடி இருப்பேன் தங்கையிடம்? எத்தனை முறை கோலுடன் “கத்திச்சண்டை” போட்டிருப்பேன் தோழர்களிடம். கை நரம்பு கிழிபட்டு உதிரம் வழிவதும் கோல் கை தவறி கண் பறிப்பதும் எதேச்சையாய் நிகழாது போன சாத்தியங்கள் மட்டுமே. கை தொடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் கொலை சாத்தியத்தை குறித்த அச்சத்தை தேவர் மகன் என்னுள் விளைவித்தது. கமல் பின்பொருமுறை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறி இருந்தார் – ”வன்முறைப் படங்களில் இரு வகை உண்டு. தேவர் மகன் பார்த்தபின் வன்முறையை குறித்த அச்சம் மட்டுமே மிஞ்சும். ஜாக்கி ஜான் படம் பார்த்துவிட்டு வருகையில் யாரையாவது அடிக்கவென தினவெடுத்து நிற்கும் கைகளும் கால்களும்.”
பொதுவாகவே உதிரம் வழிந்தோடும் வன்முறை சார்ந்த படங்களை தவிர்த்துவிடுவேன். எது சாலை விபத்தை கண்டால் என்னை தலையை வேறுபுறம் திருப்ப உந்துகிறதோ அது தான் இப்படங்களையும் காணவிடாது செய்கிறது. ஆனால் ”கில் பில்”(Kill Bill) வேறு ஒரு அனுபவம். படம் முழுக்க குருதி வழிந்தோடுகிறது. கதை என்று என்ன இருக்கிறது அதில்? பில் என்ற ஒரு கொலைக்கூட்ட தலைவன் தன் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்று ”சராசரி” வாழ்வை வாழ எத்தனித்த அவளை, தன் கூட்டத்துடன் சென்று அவளது திருமணத்தன்று சுட்டு வீழ்த்துகிறான். கணவனும் 4 உறவினர்களும் அங்கேயே இறக்க, இவள் 7 வருட கோமா நிலையில்… விழித்தெழுந்ததும் பில்லை கொல்ல விழைகிறாள். எப்படி என்பதை இரண்டு படங்களாக தந்தார் டரண்டினோ. படம் முழுக்க தலைகள் உருள்கின்றன, கைகள் துண்டாகின்றன, சிரமிழந்த கழுத்திலிருந்தும் கரமிழந்த தோளிலிருந்தும் உதிரம் ஊற்றெனப்பெருகுகிறது. ஆனால் தலை திருப்பவில்லை. மாறாக ரசித்தேன் (குற்றவுணர்வுடன்). இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. இங்கு வன்முறை அதீதமாக்கப்பட்டு, அதன் அதீத நிலையில் தனது பயங்கரங்களை எல்லாம் இழந்து நிகழ்கலையாய் காட்சியளிக்கிறது. இன்னொன்றும் உள்ளது. நான் ரசித்த அதீத வன்முறை படங்கள் அனைத்துமே, தங்களுக்கும் நான் வாழும் நிகழ்தளத்திற்குமான உறவை வலிந்து துண்டித்துக்கொண்ட படைப்புகளே. கில் பில், 300, சின் சிட்டி (Sin City) போன்ற படங்களை சொல்லலாம். இவை அவற்றின் தொடக்கம் முதலே ஒரு வித அலாதி உலகில் புகுந்துகொள்வதால் அதன் வன்முறையை, குருதிப்பெருக்கை “விலகி நின்று” பார்க்க முடிகிறது.
திடீர் என கில் பில் பற்றி யோசிக்க வைத்தது சுந்தர காண்டம். வரம் பதிப்பகம் வெளியிட்ட “சுந்தர காண்டம்” ஒலிநூலினை கேட்டுக்கொண்டிருந்தேன். கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் பகுதியினை மூலத்தின் அடியொற்றி உரைநடையில் எழுதப்பட்ட பழ. பழனியப்பனின் நூலின் ஒலி வடிவம் இது. சுந்தரராமன் என்பவரின் அருமையான குரலுடன் வெளிவந்துள்ளது. சுந்தரகாண்டம் அனுமன் மகேந்திர மலையில் இருந்து புறப்படுவதில்(கடல் தாவு படலம்) தொடங்கி, கடல் அரக்கர்களை தாண்டி இலங்கை சென்று சீதையை கண்டு, அரக்கர்களுடன் போரிட்டு, இலங்கையை எறியூட்டி இராமனிடம் திரும்ப வந்து ”கண்டனென் கற்பினுக்கு அணியை” என்று சொல்வதில் (திருவடி தொழுத படலம்) முடிகிறது. சுந்தரராமனின் குரலில் கேட்டு முடித்தவுடன் மூலத்தை புரட்டிப்பார்த்தேன் (அ.ச.ஞானசம்மந்தன் தொகுத்தது. கங்கை புத்தக நிலைய வெளியீடு). ஓரளவிற்கு சரளமாய் வாசிக்க முடிந்தது. முடித்ததும் எனை அதிகம் ஈர்த்தது இப்பகுதியின் வன்முறை தான். வாசித்துக்கொண்டிருந்த பொழுதே ”கில் பில்”லையும் 300ஐயும் நினைவூட்டியது. முடிசூட்டு கோலத்தில் அமர்ந்திருக்கும் இராமனின் காலடியை வணங்கும் அமைதியின் உருவாய் திகழும் அனுமன் அல்ல இதில். போரின் அத்தனை பயங்கரங்களையும் “மறம்” என காணும் போர் வீரன் இந்த அனுமன்.
அனுமன் அசோகவனம் புகுந்து சீதையிடம் கணையாழி பெற்று திரும்புகையில் இராவணனின் கவனத்தை கவர வேண்டி அசோகவனத்தை சிதைக்கிறான். அதை கண்ட அரக்கர்கள் தாக்க வர, அவர்களை கொல்கிறான். செய்தி இராவணன் செவி சென்று சேர்கிறது. அரக்கர் படை, படைத்தளபதி சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள், இராவணனின் மகன் அக்ககுமாரன் என ஒவ்வொருவராக வந்து அனுமனுடன் போரிட்டு மடிகின்றனர். இறுதியில் போரிட வரும் இந்திரசித்தனின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணனைப் போய் காண்கிறான். இப்படி போகிறது சுந்தரகாண்டம். இதன் தொடக்கத்திலே மகேந்திர மலையில் இருந்து இலங்கை நோக்கி பறக்க கால் ஊன்றிய பொழுது, கனம் தாளாது மலையின் வயிறு கிழிந்து குடல் வெளிவந்தது என்ற இடத்திலேயே இது ஒரு மாய தளத்துள் நுழைந்துவிடுகிறது (குரங்கு பறப்பதே அது தானே என்கிறீர்களா?
) . அதன் பின் தொடரும் வன்முறைகளில் எல்லாம் விரவிக்கிடக்கும் இவ்வித அதீதங்கள் ரசிக்கவே வைக்கின்றன. செங்களம் படக்கொன்று… என தொடங்கும் குறுந்தொகை பாடல் ஒன்று. பாடல் முழுவதும் போரில் வழியும் குருதியால் சிவந்து நிற்கும். கிங்கரர் வதை படலம் தொடங்கி சுந்தர காண்டம் முழுவதும் உதிரச்சிவப்பே கண்களை நிறைக்கிறது. எழுத்துருக்களெல்லாமும் சிவந்தது போல…..
சில பாடல்கள்…
பரு வரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால்
சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்-
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.
மலை அளவிற்கு உயர்ந்து நிற்கிறது அனுமன் தோள். அம்மலையிலிருந்து பாயும் அருவியைப் போல அவனை தாக்க வந்த அரக்கர்களின் குருதி வழிகிறது. ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைகள் தரையினில் உருள்கின்றன. மின்னலும் அஞ்சி அசையும் படி இருந்தது அனுமனின் அடி ஒவ்வொன்றும்.
ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரை – கறங்கு எனத் திரிவான்.
ஓடி கொன்றான் சிலரை; உடலோடு உடல் இடித்துக்கொன்றான் சிலரை; நெடிய மரத்தினை கொண்டு அடித்துக்கொன்றான் சிலரை; அங்கு விழுந்து கிடந்த பிணங்களினூடே யாரேனும் உயிரோடிருக்கின்றனரா என தேடிக்கொன்றான் சிலரை – சுழற்காற்று போல திரிந்த அனுமன்.
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை.
சேறும் வண்டலும் போல மூளையும் சதையும் மிதக்க அந்த நெடிய தெருவெல்லாம் வெள்ளம் வந்த ஆறு போல பாய்ந்தோடிய குருதி அனுமனின் கால்களால் அலைக்கப்பட்டு, இலங்கை முடிவின்றி வாயிலிருந்து உதிரம் உமிழ்வதை போல பாய்ந்தோடியது.
தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து
உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க்
கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர்
தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல் – சிதறி
மரம் எல்லாம் உடல்; திண்ணை எல்லாம் உடல்; தெரு முனைகளில் எல்லாம் உடல்; கடல் எல்லாம் உடல்; ஊர் நடு எல்லாம் உடல்; ஆகாயம் எல்லாம் உடல்; தெரு எல்லாம் உடல்; தேசமெல்லாம் உடல் – சிதறிக்கிடந்தன.
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்; -
தான் எலாரையும், மாருதி சாடுகை தவிரான்,
மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல்
வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர் – சுற்றி
உடல்களில் இருந்து உயிரை பிரித்து எடுத்துச்செல்லும் காலன் ஓய்ந்தே விட்டான். எல்லாரையும் அடித்துக்கொல்வதை அனுமன் நிறுத்தவேயில்லை. அவனால் கொல்லப்பட்டவர்களின் உயிர்கள் விண்மீன்களில் எல்லாம், மேகமெல்லாம், அதுக்கும் மேலே மேலே வானமெல்லாம்… அதையும் தாண்டி அலைந்துகொண்டிருந்தன.
“கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.”
- ராண்டி பாஷ் [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).
கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தெரிந்தது. அதற்கு முன் ராண்டி ஒரு பேராசிரியர், விர்ச்சுவல் ரியாலிட்டியில் உலகறிந்த ஆளுமை, கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் விர்ச்சுவல் ரியால்லிட்டி பாட திட்டத்தை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர், ஆலிஸ் என்ற மென்பொருளின் உருவாக்க குழுவை கட்டமைத்துக்கொண்டிருந்தவர். ராண்டி பாஷ் சென்ற மாதம் (ஜூலை 25, 2008) இறந்துவிட்டார்.
மீள்பார்வையில் ஒன்று தெரிகிறது. இன்று ராண்டியின் சாதனைகள் அனைத்தும் (ஒன்றை தவிர) அவரது புற்றுநோய்க்கு முன்னமே தொடங்கப்பட்டுவிட்டன. பின் ஏன் இந்த கட்டுரை? உலகில் எத்தனையோ பேருக்கு புற்றுநோய் வருகிறது. ராண்டியில் அப்படி என்ன சிறப்பு? ஒன்று இருக்கிறது. ராண்டி தொடங்கிய எந்த பணியும் புற்றுநோயின் காரணம் நிறுத்தப்படவில்லை. ராண்டியின் வாழ்வில் புற்றுநோய் தடைக்கல்லாக அல்ல, ஒரு கிரியாஊக்கயாகவே செயல்பட்டது. மெலும் துரிதமாய் நிகழ்ந்தன பணிகள். தனக்குப்பின் யார் தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப் போகின்றனர் என்பதை குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடிந்தது அவரால். மரணச்செய்தியை ஊக்கச்சக்தியாக மாற்றியது, மரணத்தினை கடைசி கணம் வரை கண்ணோடு கண் பார்த்தது இவை தான் ராண்டியின் ஆகப்பெரிய சாதனைகளாக எனக்கு தோன்றுகிறது. புனைவுகளில் மரணத்தை நோக்கி புன்முறுவலிட்டவர்களின் பட்டியல் நீளமானது. அது புனைவு என்பதனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கம் ஏற்படுத்தாது. ஆனால் நம்மிடையே வாழும் ஒரு மனிதர் இச்செயலை புரிகையில் “அவன் மானுடன், இது சாத்தியமாகி இருக்கிறது அவனுக்கு. அதனால் நானும் ஓர் மானுடன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்ற மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. எங்கோ அமெரிக்காவில் வாழ்ந்த ராண்டி இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் கண்கள் பனித்தது நாம் ஏதோ ஓர் இழையினால் பின்னப்பட்டுள்ளோம் என்பதனால் தான்.
ஆலிஸ் பற்றி சிறிது பேசலாம்.
ஒவ்வொரு வருடமும் ஆண்டு விடுமுறை தொடங்கியதும் தொடங்கிவிடும் எந்த ஊருக்கு போவது என்ற விவாதம். ஊர் என்றால் அம்மா ஊரான மதுராந்தகம், அப்பா ஊரான திருவண்ணாமலை, இரண்டில் ஒன்று. இரண்டுக்குமே தாம்பரம் வழியாகத்தான் போக வேண்டும். தாம்பரத்தில் ஒரு கண் தெரியாதவர் கைக்குட்டைகள் விற்றபடி பேருந்தில் ஏறுவார். கைக்குட்டை மிக மிக சுமார் ரகம் தான். ஆனாலும் அதை கடமையாக வாங்குபவர்கள் இருவராவது இருப்பார்கள் பேருந்தில். அங்கு கைக்குட்டையின் தரத்தினை தீர்மானித்தது கைக்குட்டை அல்ல, விற்றவரின் ஊனம். ஆலிஸ் பற்றி பேசுகையில் இது நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
ஆலிஸ் என்ற இந்த நிரலின் பயன்பாட்டினை உணர ராண்டி பாஷின் புற்றுநோய் குறித்து அறிந்திருக்க வேண்டியதில்லை. தன் பலத்திலேயே நிற்கும் தகுதி ஆலிஸுக்கு உண்டு. ஆலிஸ் என்பது சிறு வயதினருக்கு கணினி நிரலாக்கத்தின் (Programming) (குறிப்பாக பொருள் சார் நிரலாக்கத்தின் [Object Oriented Programming]) அடிப்படைகளை விளையாட்டு முறையில் கற்றுத்தரும் ஒரு நிரல். அமெரிக்காவில் சில ஆண்டுகளாக கல்லூரிகளில் கணினி துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துள்ளது. கணினி நிரல் உருவாக்கம் குறித்த ஒரு வித ஒவ்வாமை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு உருவாகிவிடுவதாலேயே இது நிகழ்வதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. ஆக பிரச்சனையின் தீர்வு பள்ளியில் கணினியினை ஆர்வமூட்டும் வகையில் கற்றுத்தருவது தான். இதை சரி செய்வதென முடிவெடுத்த ராண்டி உருவாக்கிய நிரல் தான் ஆலிஸ்.
ஆலிஸ் மூலம் நாம் நிரல்களை “எழுதலாம்”, ஒரு வரி கூட எழுதாமல். ஆலிஸ் பற்றி அறிந்துகொள்ள பொருள் சார் நிரலாக்கம் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். பொருள் சார் நிரலாக்கம் (Object Oriented Programming) என்ற நிரல் உருவாக்க கோட்பாட்டின் படி அனைத்துமே பொருட்கள் தாம். ஒவ்வொரு பொருளுக்கும் சில தன்மைகள் (Properties) மற்றும் செயல்பாடுகள் (Behaviour) உண்டு. பொருட்கள் தத்தமக்குள் நிகழ்த்தும் உறவாடல்களே ஒரு நிரலின் நிகழ்வுகளாய் விரிகின்றன. உதாரணத்திற்கு, வங்கி செயல்பாட்டிற்கான நிரல் உருவாக்க, அந்த “சிக்கல் களத்தில்” (Problem Space) என்ன பொருட்கள் இருக்கிறதென பார்க்க வேண்டும். வங்கி கணக்கு என்பது ஒரு பொருள். வங்கி கணக்கிற்கு வைப்புத்தொகை (Balance) என்பது ஒரு தன்மை. பணம் கணக்கிற்கு உள்ளே வருவதும் (Deposit), வெளியேறுவதும் (Withdrawal) செயல்பாடுகள். ஒரு பரிவர்தனை (transaction) நிகழ ஒரு கணக்கிலிருந்து மற்றோர் கணக்கிற்கு பணம் செல்ல வேண்டும். அதாவது இரு “வங்கி கணக்கு” பொருட்கள் தமக்குள் உறவாட வேண்டும். இதை நான் இப்போது விளக்கியது போலவே 6வது படிக்கும் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்தால் என்ன ஆகும்?
இங்கு தான் ஆலிஸ் முக்கிய இடம் வகிக்கிறது. பொருள் சார் நிரலாக்கத்தில் அடிப்படைகளை கற்றுத்தர ஆலிஸ் பயன்படுத்தும் உத்தி இது தான். ஆலிஸை திறந்தவுடன் நம்முன் ஒரு “உலகம்” இருக்கும். இப்போதைக்கு அந்த உலகத்தில் எதுவும் இல்லை. வெறும் பாழ் [படம் 1]. இவ்வுலகில் நாம் வீடு, மனிதன், பூச்சி என பல்வேறு விதமான பொருட்களை சேர்க்கலாம். ஒவ்வொரு பொருளின் தன்மையை மாற்றலாம். செயல்பாடுகளை சேர்க்கலாம். உதாரணமாக சூரியன் என்ற பொருளை சேர்க்கலாம். சூரியனுக்கு “இங்கு இருந்து இவ்வளவு தூரம் நகர்ந்து அதோ மலைக்கு பின்னே போய் மறை” என்ற செயல்பாட்டினை தரலாம். அது நிகழும் போதே “உலகில்” “வெளிச்சத்தை குறைத்துக்கொள்” என்ற செயல்பாட்டினை தரலாம். விளையாட்டாக பாவித்தே இதை குழந்தைகள் செய்யலாம். ஆனால் இவற்றின் மூலம் அவர்கள் நிரலாக்கத்தின் பல அடிப்படைகளை கற்காமலேயே உள்வாங்கிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நிரலின் முடிவும் ஒரு animationஆக காட்சியளிக்கும் [படம் 2]. இவற்றை avi கோப்புகளாகவும் சேமிக்க முடியும் . ஆலிஸ் குழு இப்போது அடுத்த பதிப்பான 3.0வை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். 2.0 குறிப்பாக எந்த ஒரு கணினி மொழியையும் கற்றுத்தருவதில்லை. நிரலாக்கத்தின் பொது விதிகளை மட்டுமே கற்றுத்தருகிறது. ஆனால் ஆலிஸ் 3.0 மூலம் நாம் ஜாவா மொழியை கற்றுக்கொள்ள முடியும்.
படம் 1 – “பாழ்” உலகம்.
படம் 2 : நான் “எழுதிய” நிரல் – காட்சிக்கோப்பாக
பத்து சதவிகித அமெரிக்க பள்ளிகள் ஆலிஸ் மூலம் கணினி நிரலாக்கத்தினை கற்றுத்தருவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறார்கள். இந்தியாவிலும் இந்த நிரலினை பயன்படுத்தி கற்றுக்கொடுத்தால் நிச்சயம் பலன் தரும் என்றே தோன்றுகிறது.
ராண்டி பாஷ் 2007 செப்டம்பர் மாதம் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் “கடைசி உரை” (Last Lecture) என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார். இது இணையத்தில் மிகப்பரவலாக பார்க்கப்பட்டது. அந்த உரையில் ஒரு இடத்தில் இப்படி சொல்கிறார். ‘மோசஸின் வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) போல தான் எனக்கு ஆலிஸ் 3.0. அங்கு தேனும் பாலும் ஓடுகிறது என எனக்கு தெரியும். உங்களுக்கு வழியையும் காட்டுவேன். ஆனால் நீங்கள் அங்கு சென்று சேரும் போது நான் இருக்க மாட்டேன்”. அடுத்த வருட கோடையில் தான் ஆலிஸ் 3.0 வெளிவரவிருக்கிறது. ராண்டி கைகாட்டிய திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது அவர் உருவாக்கிய குழு.
சிறு வயதில் தினமணி கதிரில் பார்த்த ஒரு புகைப்படம். பசுமை சூழ்ந்த குளம். அதில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருக்கிறாள். தன் நீண்ட மயிற்கற்றைகளை காற்றில் எம்ப விட, அவற்றிலிருந்து மேலெழும் நீர்த்திவலைகள் அந்தரத்தில் உறைந்து நிற்கின்றன. கண்ணைப்பரிக்கும் அழகு மிலிரும் படம் அது. அதன் கீழ் இந்த வாசகம். கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ். ராண்டி பாஷின் வாழ்க்கையை நோக்கினால் இது தான் பிரதானமாய் தெரிகிறது. கண நேர வாழ்வெனினும் காட்சியாய் வாழ்தல்.
சுட்டிகள் :
ராண்டி பற்றிய விக்கி பக்கம் : http://en.wikipedia.org/wiki/Randy_Pausch
ராண்டியின் “கடைசி உரை” : http://en.wikipedia.org/wiki/Really_Achieving_Your_Childhood_Dreams
கடைசி உரை கூகுல் வீடியோவில் படமாக : http://video.google.com/videoplay?docid=-5700431505846055184
ஆலிஸ் தளம் : http://www.alice.org
Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது. (http://www.wnyc.org/shows/shorts/). எனது “கட்டாயம் கேட்கப்படவேண்டியவை” பட்டியலில் உள்ள பாட்காஸ்ட் இது.
விதிர்²-த்தல் [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.–1. To tremble, quiver; நடுங்கு தல். 2. To be afraid; அஞ்சுதல். (W.)–tr. 1. To scatter, throw about; சிதறுதல்.
விதிர்த்தல் – To scatter, throw about; சிதறுதல்.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,மயக்குறு மக்களை இல்லோர்க்குப்பயக்குறை இல்லைத் – தாம் வாழும் நாளே.- பாண்டியன் அறிவுடை நம்பி
விதிர்ப்பு – Trembling, shivering, shaking from fear; நடுக்கம்.
ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னைஇன்னாது உற்ற அறனில் கூற்றே!திரைவளை முன்கை பற்றி-வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!- வன்பரணர்
இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில். எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும் செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில் சிக்கியவை குல்சாரின் மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அம்மூன்று கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி…
குல்சார் கவிதைகள்
—————
அரவமின்றி வருகிறாய், சொல்லாது செல்கிறாய்
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
தோட்டத்தில், சில பொழுதுகளில்….
புளியமரம்
காற்றினில் அசைகையில்,
கல் சுவர்களின் மேல்
தெறிக்கும் நிழற்ப்புள்ளிகள்
உறிஞ்சப்படுகின்றன,
காய்ந்த நிலத்தின் மேல்
தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளைப் போல.
தோட்டத்தில், ஞாயிறொளி நிதானமாக விம்முகிறது.
மூடிய அறைகளில்…
விளக்கொளி துடிக்கையில்,
பரந்த நிழலொன்று எனை உண்ணத்துவங்குகிறது, ஒவ்வொரு கவளமாய்.
தூரத்திருந்து
கண்கள் எனையே பார்த்தபடி உள்ளன.
எப்போது வருகிறாய்? எப்போது செல்கிறாய்?
நாளின் அனேக சமயங்களில் எண்ணத்தில் இருக்கிறாய்.
ஆங்கில மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11126
***
வருக
——–
திடீரென
கோவமாய் அறையுள் நுழைந்த காற்று
புயலொன்றை கட்டவிழ்த்து விட்டது
திரைச்சீலைகள் படபடத்தன
மேஜை மேல் கண்ணாடிக்கோப்பைகள் பரத்தப்பட்டன
பக்கங்கள் விதிர்விதிர்க்க, ஒரு புத்தகம் அவசரமாய் தன் முகம் மூடியது
மைபுட்டி பாய்ந்து
வெற்றுத்தாள்களில் வண்ணத்தோரணங்களிட்டது
சுவற்றுச்சித்திரங்கள் ஆச்சரியத்தில்
உனை காணவென எம்பிப் பார்த்தன
மீண்டும் இப்படி
வா
என் அறையை
மூழ்கடி
ஆங்கில மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11115
****
மன்னித்துவிடு, சோனா
—————–
மன்னித்துவிடு, சோனா.
இம்மழையினில்
என் வரிகளின் நிலப்பரப்பினூடே
பயணிப்பது
உனக்கு அசௌகர்யமாய் இருக்கலாம்.
இங்கு பருவம் பாராது பெய்யும் மழை.
என் கவிதைகளின் குறுக்குச்சந்துகள் பெரும்பாலும் ஈரமாகவேயுள்ளன.
குழிகளில் அனேகம் சமயங்களில் நீர் சேர்ந்து கிடக்கிறது.
இங்கு தடுக்கி விழுந்தால்
உன் கால் சுளுக்கிக்கொள்ளலாம், ஜாக்கிரதை.
மன்னித்துவிடு. எனினும்….
உன் அசௌகர்யத்திற்கு காரணம்
என் வரிகளில் வெளிச்சம் சற்று மங்கலாக இருப்பது தான்.
நீ கடக்கையில்
புலப்படாது கிடக்கின்றன
வாயிற்படியின் கற்கள்
நான் அடிக்கடி இடித்து கால்நகம் பெயர்த்துக்கொள்வேன் இதில்
குறுக்குச்சாலையில் நிற்கும் தெருவிளக்கு
யுகங்களாய், எறியாமல் நிற்கிறது.
நீ அசௌகர்யப்பட்டுள்ளாய்.
மன்னித்துவிடு. இதயத்திலிருந்து கேட்கிறேன், மன்னித்துவிடு.
ஆங்கில மூலம் : http://india.poetryinternationalweb.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=11112
தமிழில் : சித்தார்த். வெ
ஒளியும் ஒலியும்
1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார் மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது…
இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு பழக்கப்பட்டுக்கொண்டிருந்தார். சாப்பிடும்போது இருமல் வரத்தொடங்கியது. மெல்லுவது பெரும் பணியென்றானது. அவரது கால்கள் இறந்துவிட்டிருந்தன. இனி ஒருபோதும் அவரால் நடக்கவியலாது.
இருந்தும், மோரி சோர்வடைய மறுத்தார். பதிலாக, புதுப்புது எண்ணங்களின் ஊற்றக்கண்ணாக மாறினார். தனக்கு தோன்றிய எண்ணங்களையெல்லாம் குறிப்பேடுகள், அஞ்சலுறைகள், துண்டு காகிதங்கள் என கிடைத்த இடமெல்லாம் எழுதினார். மரணத்தின் நிழலில் வாழ்வதைக் குறித்த சின்னச்சின்ன தத்துவங்கள் எழுதினார் : “உன்னால் எதை செய்யமுடியும் எதை செய்ய முடியாது என்று ஆராய்ந்து ஏற்றுக்கொள்.” , “கடந்தகாலத்தை கடந்தகாலமாகவே ஏற்றுக்கொள், மறுக்கவோ மாற்றவோ முயற்சிக்காதே”, “உன்னையும் மற்றவர்களையும் மன்னிக்கக் கற்றுக்கொள்”, “காலம் கடந்துவிட்டது, இனி எப்படி அப்பிரச்சனையுள் தலையிட என நீயாக எண்ணிக்கொள்ளாதே”.
விரைவிலேயே இது போன்ற 50 “தனிமொழிகள்” சேர, இவற்றை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். இச்சொற்றொடர்களால் மிகவும் கவரப்பட்ட மௌரி ஸ்டேய்ன் என்ற மோரியுடன் பணிபுரிந்த நண்பர், இவற்றை தொகுத்து பாஸ்டன் க்ளோப் இதழின் நிருபருக்கு அனுப்ப, அவர் இதை கொண்டு ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையின் தலைப்பு :
ஒரு பேராசிரியரின் கடைசி பாடம் : தன் மரணம்
இந்த கட்டுரை “நைட்லைன்” நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒருவரின் கண்ணில் பட, அவர் இதை வாஷிங்டன்னில் இருந்த டெட் கோப்பலின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
“இத படிச்சு பாரேன்” என்றார் தயாரிப்பாளர்.
விளைவு… இதோ, மோரியின் வீட்டினை ஒளிப்பதிவாளர்கள் சூழ்ந்திருக்க, டெட் கோப்பலின் கார் வாயிலை அடைகிறது.
கோப்பலைக் காண மோரியின் நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வீட்டில் குழுமியிருந்தனர். கோப்பல் உள்ளே நுழைந்ததும் அங்கு படர்ந்த பரவசம் அனைவரையும் தொற்றிக்கொண்டது, மோரியைத் தவிர. சக்கர நாற்காலியில் மெல்ல முன்னே வந்து புருவம் உயர்த்தி, உரத்த, பாடுவதைப் போன்ற குரலில்,
“டெட், பேட்டிக்கு ஒத்துக்கறத்துக்கு முன்ன உங்கள கொஞ்சம் சோதிச்சுப் பாக்கனுமே நானு” என்றார் மோரி.
அங்கு பரவிய சங்கடமான மௌனத்தினூடே அவ்விருவரும் அறைக்குள் சென்றனர். கதவு சாத்தப்பட்டது. “டெட் மோரிய ரொம்ப படுத்தாம விட்டுடுவாரா?” என்றார் ஒருவர். “அட போப்பா… மோரி டெட்ட ரொம்ப கஷ்டப்படுத்தாம விடனுமேன்னு நான் கவலைப்படறேன்” என்றார் மற்றொருவர்.
உள்ளே, டெட்டை அமர்ந்துகொள்ளுமாறு சைகைகாட்டினார் மோரி. கைகளை மடியில் கட்டிக்கொண்டு புன்னகையுடன்,
“உங்க மனசுக்கு பக்கத்துல இருக்கற எதையாவது பத்தி பேசுங்க”, என்றார்.
“மனசுக்கு?”
கோப்பல் அந்த முதியவரை கூர்ந்து நோக்கினார். “ம்ம். சரி” என்று தனது குழந்தைகளைக் குறித்து பேசத்துவங்கினார். குழந்தைகள் மனதிற்கு அருகிலிருப்பவர்கள் தான் அல்லவா?
“ம்ம். நல்லது,. உங்க நம்பிக்கைகள பத்தி ஏதாவது சொல்லுங்க” என்றார் மோரி.
டெட் நெளிந்தார். “சந்திச்சு கொஞ்ச நேரமே ஆனவர் கிட்ட இதப்பத்தி எல்லாம் எப்படி பேச?”
“டெட், நான் செத்துக்கிட்டு இருக்கேன். என் கிட்ட நேரம் அதிகம் கிடையாது”
டெட் சிரித்துவிட்டார். சரி, நம்பிக்கை…. தனக்கு மிகவும் பிடித்த மார்க்கஸ் ஔரிலியஸின் வாக்கியம் ஒன்றை கூறிவிட்டு,
“நான் ஒன்னு கேக்கறேன். என் நிகழ்ச்சிய பாத்திருக்கீங்களா நீங்க?” என்றார் டெட்.
“ம்ம். பாத்திருக்கேன். ரெண்டுமுறைன்னு நினைக்கறேன்.”
“ரெண்டுமுறையா? அவ்வளவு தானா?”
“ரொம்ப கவலைப்படாதீங்க. ஓஃப்ரா வ ஒரு முறை தான் பாத்திருக்கேன்.”
“ரெண்டுமுறை பாத்திருக்கீங்களே… என்ன நினைக்கறீங்க நிகழ்ச்சிய பத்தி?”
மோரி இடைவெளி விட்டு, “உண்மைய சொல்லவா?” என்றார்.
“ம்ம்”
“நீங்க ஒரு தன்மோகியா தான் (narcissist) பட்டீங்க எனக்கு”
“தன்மோகியா இருக்க முடியாத அளவுக்கு அசிங்கமானவன் மோரி நானு” என்றார் டெட் சிரித்துக்கொண்டே.
கோப்பல் கச்சிதமான நீல நிற சூட்டும், மோரி தொள தொளவென்றிருந்த சாம்பல் நிற ஸ்வெட்டரும் அணிந்திருக்க, வரவேற்பறையில் ஒளிப்பதிவு துவங்கியது. ஆடம்பர உடைகளோ ஒப்பனையோ வேண்டாமென மறுத்துவிட்டார் மோரி. மரணம் வெட்கப்படவேண்டிய விடயம் அல்ல என்பது அவர் சித்தாந்தம். இப்போது போய் அவர் மூக்கிற்கு பௌடர் அடித்துக்கொள்ளப்போவதில்லை.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்ததனால் அவரது தளர்ந்த கால்கள் ஒளிப்பதிவின் போது மறைந்தே இருந்தன. வாழ்வின் அந்தியை எதிர்கொள்வதைப் பற்றி பேசுகையில் – கைகள் இன்னும் வலுவிழக்காததால் – இரு கரங்களையும் ஆட்டி ஆட்டி பேசினார் மோரி, பெரும் உற்சாகத்துடன்.
“டெட், இதெல்லாம் தொடங்கினப்ப என்னையே நான் கேட்டுக்கிட்டேன். எல்லாரையும் போல நானும் உலகியல்ல இருந்து விலகி இருக்க போறனா, இல்ல வாழனும்னு முடிவெடுக்கப்போறனான்னு. வாழனும். கன்னியமா, தைரியமா, புன்னகையோட, நிதானமா வாழனும். அல்லது அதற்கான முயற்சியாவது எடுக்கனும்னு முடிவு செஞ்சேன்.”
“சில விடியல்கள் கழிவிரக்கம் பொங்க, அழுகையோட தான் விடுயுது. சில விடியல்கள் கோபமும் கசப்புமா. ஆனா ரொம்ப நேரம் நீடிக்காது இதெல்லாம். எழுந்து எனக்கு நானே சொல்லிப்பேன். நான் வாழனும்… வாழனும்…..”
“இது வரைக்கும் என்னால முடிஞ்சிருக்கு இத செய்ய. இனிமேலும் தொடர்ந்து இருக்க முடியுமா இப்படி? நிச்சயமா சொல்லத் தெரியல. என் மேலையே நான் பந்தயம் கட்டறேன், என்னால முடியும்னு”.
கோப்பல் மோரியின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார். மரணம் தரும் பணிவு குறித்து கேட்டார்.
“அதாவது, ஃப்ரெட்” என்ற மோரி, தன் தவறை உணர்ந்து “இல்ல, இல்ல, டெட்…” என கூற,
“இது உண்மையாவே பணிவ தர்ர விஷயம் தான்” என்றார் டெட், சிரித்துக்கொண்டே.
நோய்க்குப்பின்னான வாழ்வினைக்குறித்து இருவரும் பேசினர். மோரி மற்றவர்களை அதிகம் சார்ந்திருப்பதைப் பற்றி பேசினார். உண்ண, அமர, அங்கும் இங்கும் செல்ல என இப்பொழுதே எல்லாவற்றிற்கும் அவர் மற்றவர்களை தான் நம்பியிருந்தார். இந்த மெல்ல நிகழும் உதிர்தலில் எதை நினைத்து மிகவும் அஞ்சுகிறீர்கள் என மோரியை கேட்டார் டெட்.
மோரி சற்று அமைதியாகி… அந்த விடயத்தை தொலைக்காட்சியில் கூறலாமா என வினவினார்.
ம்ம் என்றார் டெட்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பேட்டியாளரை கண்ணோடு கண் நோக்கி மோரி கூறினார், “டெட். இன்னும் சில நாட்கள்ல எனக்கு கால் கழுவிவிட யாராவது வேணும்.”
நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. டெட் கோப்பல் அதிகாரம் தெறிக்கும் குரலில் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
“மோரி ஷ்வார்ட்ஸ் யார்? இவ்விரவின் முடிவிற்குள் உங்களில் பலரும் அவர் மேல் ஏன் அக்கரை கொள்ளப்போகிறீர்கள்?”
ஆயிரம் மைல்களுக்கு அப்பால், குன்றில் மேல் அமைந்த என் வீட்டில் சாவகாசமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக்கொண்டிருந்தபோது தான் அந்த வாக்கியம் எனை தாக்கியது. “மோரி ஷ்வார்ட்ஸ் யார்?”. உரைந்து போனேன்.
நாங்கள் இருவரும் இணைந்த முதல் வகுப்பு அது. 1976ஆம் ஆண்டின் வசந்த காலம். மோரியின் பெரிய அலுவலக அறையுள் நுழைந்ததும் சுவற்றை நிறைத்து நின்ற எண்ணற்ற புத்தகங்கள் கண்ணைக் கவர்ந்தன. சமூகவியல், தத்துவம், ஆன்மீகம், உளவியல் என வகைவகையாய் புத்தகங்கள். மரத்தாலான தரையின் மீது பெரிய கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. வளாகத்தின் நடைபாதையை பார்த்தபடி ஒரு ஜன்னல். கைகளில் புத்தகமும் அட்டவணையுமாய் பத்து பன்னிரண்டு மாணவர்கள் தான் நின்றிருந்தனர் அங்கு. பெரும்பாலானோர் ஜீன்ஸும், சாதாரண ஷூக்களும், அரைக்கைச்சட்டையும் அனிந்திருந்தனர். இத்தனை சிறிய வகுப்பில் இருந்து தப்பித்து வெளியேறுவது கடினம் என கருதி, திரும்பிவிடலாமா என யோசிக்கையில்,
“மிட்சேல்?” என பதிவேட்டில் இருந்த பெயரைப் படித்தார் மோரி. நான் கை தூக்கினேன்.
“மிட்ச் ன்னு கூப்பிடவா, இல்ல மிட்சேல்னு தான் கூப்பிடனுமா?”
இதுவரை எந்த ஆசிரியரும் இப்படி வினவியதில்லை. ஒருமுறை அவரை மேலும் கீழும் பார்த்தேன். மஞ்சள் சட்டை, பச்சை கால்ச்சட்டை. நெற்றியை மறைத்த வெள்ளி நிற முடி. அவர் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
மிட்ச், என்றேன் நான். “நண்பர்கள் என்ன அப்படி தான் கூப்பிடுவாங்க”
“ம்ம். அப்ப மிட்ச் தான்”, என்றார் மோரி. “அப்பறம், மிட்ச்?”
ம்ம்?
“ஒரு நாள் என்னையும் உன்னோட நண்பனா நினைப்பன்னு எதிர்பாக்கறேன்”
மாணவன்
அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும்.
நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை.
உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த வருடங்கள், கல்லூரியை விட்டு நியூ யார்க் சென்று, திறமைகளை உலகிற்கு அர்ப்பணிக்க துடிக்கும், திக்கிப்பேசும் பட்டதாரியிலிருந்து என்னை வெகுவாய் மாற்றி இருந்தன.
உலகம், அவ்வளவு ஒன்றும் சுவாரஸ்யமானது அல்ல என்பதனை கண்டறிந்தேன். எனது இருபதுகளின் முற்பகுதியை வாடகை கொடுத்தபடியும், விளம்பரங்களை படித்தபடியும், இந்த விளக்கு எனக்கு மட்டும் ஏன் பச்சையாக மாற மறுக்கிறது என எண்ணியபடியும் கழித்தேன். புகழ்பெற்ற இசைக்கலைஞனாவதே என் கனவாக இருந்தது (நான் பியானோ வாசித்தேன்).
இருண்ட, காலியான இரவுவிடுதிகள், முறிந்த வாக்குறுதிகள், உடைந்த இசைக்குழுக்கள், என்னைத்தவிர மற்ற அனைவரிடமும் ஆர்வம் காட்டிய தயாரிப்பாளர்கள் என கழிந்த வருடங்கள் என் கனவுகளை புளிப்பேறச்செய்தன. முதன் முறையாய் என் வாழ்வில் நான் தோற்கிறேன்.
இதே காலகட்டத்தில் தான் மரணத்துடனான என் முதல் சந்திப்பும் நிகழ்ந்தது.
எனக்கு இசையை கற்றுத்தந்த, வாகனமோட்டக் கற்றுத்தந்த, என் தோழிகள் குறித்து பகடி செய்த, என்னுடன் கால்பந்து விளையாடிய, ‘நான் வளர்ந்ததும் இவரைப்போல ஆகவேண்டும்’ என் எண்ண வைத்த என் மாமா (அம்மாவின் தம்பி) கணைய புற்றுநோயால் தனது நாற்பத்து நான்காம் வயதில் இறந்தார். சற்றே குள்ளமானவர். தடித்த மீசை வைத்த அழகன். அவரது வாழ்வின் கடைசி ஆண்டினை அவருடன் தான் கழித்தேன், அவரது வீட்டிற்கு ஓர் அடுக்கு கீழே. அவரது உறுதியான உடல் இளகி, பின் ஊதியது. ஒவ்வொரு இரவும் உணவு மேஜையில் வயிற்றை பிடித்துக்கொண்டு குனிந்து கண்களை இறுக மூடி வலியில் உதடுகள் துடிக்க “ஆஆ… கடவுளே”, “ஐயோ… ஏசுவே” என முனகியதை நாங்கள் – அத்தை, இரு மகன்கள், நான் – தட்டுகளை துடைத்துக்கொண்டு, ஒருவர் கண்களை ஒருவர் தவிர்த்தபடி மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தோம்.
இயலாமையை மிக உக்கிரமாக உணர்ந்த காலம் அது. காற்று இளம்சூடுடன் வீசிய மே மாத இரவொன்றில், மாமாவும் நானும் வீட்டின் முகப்பில் அமர்ந்திருந்தோம். தொலைவானத்தை பார்த்துக்கொண்டிருந்த மாமா,அடுத்த வருடம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை காண தான் இருக்கப்போவதில்லை என்றார் பற்களை கடித்தபடி. “நீ அவங்கள பாத்துப்பியா?” என்றபோது, இப்படி எல்லாம் பேசவேண்டாம் என்றேன். சோகமாக என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.
அடுத்த சில வாரங்களில் அவர் இறந்தார்.
அந்த மரணத்திற்கு பிறகு என் வாழ்வே மாறியது. காலம் சிந்திக்கொண்டிருக்கும் நீரினைப் போல தெரிந்தது. இன்னும் வேகமாக ஓட வேண்டும். பாதி காலியான இரவு விடுதிகளில் இசைப்பது இனி இல்லை. என் அறையில் அமர்ந்து யாருமே கேட்கப்போகாத பாடல்களை எழுதுவது இனி இல்லை. மீண்டும் கல்லூரிக்கு சென்றேன். இதழியலில் முதுகலை பட்டம் பெற்று, விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக கிடைத்த முதல் வேலையில் சேர்ந்தேன். எனது புகழை நானே தேடி ஓடுவதை நிறுத்திவிட்டு, புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களுடைய புகழைத் தேடி ஓடுவதை குறித்து செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் எழுதினேன். காலம் நேரம் தெரியாமல் உழைத்தேன். விழித்ததும் பல் துலக்கிவிட்டு தட்டச்சத்தொடங்குவேன், இரவு அணிந்திருந்த அதே உடைகளுடன். என் மாமா ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தார். அவர் அவ்வேலையின் வழமையை வெறுத்தார் – அதே வேலை, ஒவ்வொரு நாளும். அவரைப் போல ஆகிவிடக்கூடாதென்ற உறுதியுடன் உழைத்தேன்.
நியூ யார்க்குக்கும் ஃப்லோரிடாவுக்குமாய் அலைந்து, இறுதியில் டெட்ராட்டில் இருந்து வெளி வரும் டெட்ராய்ட் ஃப்ரீ பிரஸ் (Detroit Free Press) என்ற பத்திரிக்கையில் விளையாட்டுப்பகுதி எழுத்தாளராக பணிக்கு அமர்ந்தேன். டெட்ராய்ட் நகருக்கு விளையாட்டின் மீது யானைப்பசி. கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால், ஹாக்கி என எல்லா விளையாட்டுக்களுக்கும் அணிகள் இருந்தன அங்கு. என் லட்சியத்திற்கு சரியான களமாக அமைந்தது அந்நகரம். சில வருடங்களிலேயே, பத்திகள் எழுதுவதோடு, விளையாட்டு புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி என என் களம் விரிவடைந்தது. இப்போது நமது நாட்டினை தொப்பலாக நனைத்திருக்கும் ஊடகப் புயலில் நானும் ஓர் அங்கமாக இருந்தேன். நான் தேவைப்பட்டேன்.
வாடகைகளை நிறுத்தினேன். வாங்கத்தொடங்கினேன். குன்றின் மேல் ஒரு வீடு வாங்கினேன். கார்கள் வாங்கினேன். பங்கு சந்தையின் வணிகம் செய்தேன். எப்போதுமே ஐந்தாவது கியரிலேயே ஓட்டினேன் வாழ்க்கையை. பேய் போல உடற்பயிற்சி. அபாய வேகத்தில் கார் ஓட்டம். நான் கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவு பணம் சம்பாதித்தேன். எனது இடைவிடாத பணியினையும் பயணங்களையும் மீறி என்னை காதலித்த ஜேனைன் என்ற ஓர் கருங்கூந்தல் பெண்ணை சந்தித்தேன். ஏழு வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் முடிந்த அடுத்த வாரம் பணி செய்ய ஆரம்பித்து விட்டேன். அவளுக்கு கூறினேன் – எனக்கும் தான் – நாம் ஒரு நாள் பிள்ளைகள் பெற்று குடும்பம் அமைக்கலாம் என்று. அந்த நாள் வரவே இல்லை.
அதற்கு பதிலாய், குறிக்கோள்களை அடைவதில் என்னை மூழ்கடித்துக்கொண்டிருந்தேன். குறிக்கோள்களை அடைவதன் மூலம் வாழ்வின் மீதான என் பிடியை இறுக்கமாக்கவியலும் என நம்பினேன். என் மாமாவைப்போல நோய்வாய்ப்பட்டு இறப்பதற்குள் (இது நிச்சயம் நடக்கும் என நம்பினேன்) மகிழ்ச்சியின் கடைசி துளி வரை உறிஞ்சி எடுத்துவிடவேண்டும் என தோன்றியது.
மோரி? ம்ம்.. எப்போதாவது நினைத்துக்கொள்வேன் அவரை, அவர் புகட்டிய “மனிதனாய் இரு”, “மற்றவரோடு உறவாடு” என்பதையெல்லாம். ஆனால் அவை வேறோர் வாழ்விலிருந்து வருவதைப்போல, எப்போதும் வெகு தொலைவிலேயே இருந்தன. இந்த வருடங்களிலெல்லாம், பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த மடல்கள் அனைத்தையும், நன்கொடை கேட்டே எழுதி இருப்பார்கள் என்றெண்ணி படிக்காமல் எறிந்துவிடுவேன். அதனால் மோரியின் நோயினைப் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு சொல்லி இருக்கக்கூடிய நண்பர்களும் தொடர்பில் இல்லை.
இது இப்படியே இருந்திருக்கும், அன்றிரவு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை துழாவிக்கொண்டிந்த போது, ஏதோ ஒன்று என் காதுகளை அடையாதிருந்திருந்தால்….



