பிரிவுகள்
திரைப்படம்

தமிழ் சினிமா – சில கேள்விகள்.

கொஞ்சம் நாள் தொடர் ஓட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளாமல் இருந்தேன். இழுத்து விட்ட ஐகராஸ் பிரகாஷுக்கு நன்றி . இந்த கேள்விகளின் நதிமூலம் ஆராய விரும்புபவர்கள் பிரகாஷின் பதிவை சுட்டவும்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயதில், பார்த்த முதல் படம் எது என்பதெல்லாம் துள்ளியமாக நினைவிலில்லை. மிகச் சிறிய வயதிலேயே என்பது மட்டும் தெரியும். சிறுவயதும் சினிமாவும் என யோசித்தால் சில புகைமூட்டமான நினைவுகள் வருகின்றன. அப்போது நாங்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை என அருகருகே வீடு மாற்றிக்கொண்டிருந்ததால் தேவி திரையரங்கு வளாகமும் அங்கு பார்த்த (முப்பரிமான கண்ணாடியோடு) மை டியர் குட்டிச்சாத்தான், கிங் சாலமன்ஸ் மைன்ஸ், ஜாக்கி ஷராஃபின் ஹீரோ நினைவுக்கு வருகின்றன. வீட்டருகே இருந்த பாரகன் தியேட்டரில் பார்த்த பட்டனத்தில் பூதம், அல்லி ராஜ்ஜியம், மாயா பஜார் மற்றும் விட்டலாச்சாரியார் படங்களும். இன்றை போலவே அன்றும் கொண்டாட்டமான படங்களே பிடித்திருந்தன. பூவே பூச்சூடவா நானும் என் தங்கையும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்த படம்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

நேற்று முன் தினம் பார்த்த ராமன் தேடிய சீதை. படம் எனக்கு பிடித்திருந்தது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சென்ற வாரம் வீட்டில் டிவிடியில் பார்த்த சரோஜா. பார்த்ததும் தோன்றியது… மிக மிக சிறிய படம். கால அளவை மட்டும் சொல்ல வில்லை. களமும் மிகச்சிறியது. நகைச்சுவையை எடுத்துவிட்டால் ஒன்றுமே எஞ்சியிருக்காது படத்தில். படத்தை மிகவும் ரசித்தேன் என்றாலும் எல்லா படங்களும் இப்படியே இருந்தால் Claustrophobicஆக உணர ஆரம்பித்து விடுவோம் என்று படுகிறது. தவமாய் தவமிருந்தேன் போன்ற ஒரு வாழ்கையை முழுவதுமாய் பார்க்கும் படங்களும் நமக்கு தேவை.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

மகாநதி. வறுமையின் நிறம் சிவப்பு. வீடு. தண்ணீர் தண்ணீர்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பு விவகாரம்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அப்பு கமல். தசாவதாரத்தில் கடைசி சண்டை காட்சி. மை டியர் குட்டிச்சாத்தானில் ஐஸ் கிரீம் நீட்டப்படும் இடத்தில் என் கைகள் முன் இருக்கைகாரரின் தலையை தாக்கின. இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தான் படுகிறது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வரலாற்றில் ஆர்வமுண்டு என்பதால் திரைப்படம் குறித்த வரலாற்று தகவல்களை (தியோடர் பாஸ்கரன், ஷாஜியின் கட்டுரைகள் போல) ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. நிழல், கனவுப்பட்டறை போன்ற திரைப்படம் சார்ந்த சிற்றிதழ்களும். தவிரவும் வாரஇதழ்களை (குமுதம், விகடன் இத்தியாதிகள்) வாங்கும் யாரும் திரைப்படம் குறித்த செய்திகளை தேடிச்செல்ல வேண்டியதில்லை. வீடு தேடி வரும். என்ன… அது திரைப்படத்தை பற்றி இருக்காது. திரைப்படத்துறையையும் அதை சார்ந்தவர்களையும் குறித்த மீதகவல்களாக (metadata) மட்டுமே இருக்கும்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை எனக்கு அறிமுகமானதே சினிமா மூலமாக தான். ஆங்கில இசை புரிவதில்லை. கொஞ்சம் தள்ளி கிஷோர் குமார், ரஃபி, மகாராஜபுரம் என்று சென்றது கூட வெகு சமீபத்தில் தான். அதற்கு முன்பெல்லாம் இசை என்றால் எம்.எஸ்.வி, இளையராஜா தான். சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை ஏ. எம். ராஜா பற்றி ஷாஜி எழுதியது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்திய மொழிப்படங்கள் எனில் மலையாளம் மிக அதிகமாக பார்ப்பதுண்டு (கடைசியாக பார்த்தது ஶ்ரீநிவாஸனின் அரபிகதா). சில வங்க மொழிப்படங்களை பார்த்ததுண்டு. இந்திய அளவில் அவ்வளவு தான். உலக மொழி படங்கள் மீது ஆர்வம் உண்டு. பருவத்திற்கு ஏற்ப பார்க்கும் மொழிகளும் மாறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொரிய மற்றும் ஜப்பானிய படங்கள்.

அதிகம் தாக்கிய படங்கள் :

வாழ்வு அழிவை நோக்கி செல்லும் பயணம் என்ற பிம்பத்தை மிக அழுத்தமாக விதைத்ததற்காக –  ஷேம் (ஸ்வீடன் – இங்க்மார் பெர்க்மன்).  டர்டில்ஸ் கேன் ஃப்ளை (குர்த் – இரான் பஃமான் கோபாதி). ரான் (ஜப்பான் – அகிரா)

வாழ்வின் உன்னதம் என்று ஒன்றை காட்டியதற்காக – ரெட் பியர்ட், இகிரு (ஜப்பான் – அகிரா). சில்றன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் (ஈரான் – மஜித் மஜீதீ), அபுர் சன்சார் (வங்கம் – சத்யஜித் ரே).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மதுரைக்கு விமானத்தில் சென்ற போது எனக்கு இரண்டு இருக்கைகள் தள்ளி கஞ்சா கருப்பு பயணம் செய்தார். இது தான் சினிமாவுடனான எனது நேரடி தொடர்பு. ஒன்றும் செய்யவில்லை. அதுவாக நிகழ்தால் தடுக்க மாட்டேன். பட்டாம்பூச்சி சிறகசைத்தால் புயல் வருமாம். எனில் இதனாலும் ஏதேனும் நிகழாமல் போகுமா என்ன?

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக மிக நன்றாக இருப்பதாக. இந்த தலைமுறை தமிழகத்திற்கும் சென்ற தலைமுறை தமிழகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கிறது என்பது கண்கூடு. கண்ணாடிக்குவளையின் மீது விஷம் என ஸ்கெட்ச் பேனாவினால் எழுதி ஒட்டி அதில் காமிராவை சூம் செய்யும் சேட்டையெல்லாம் நடந்திருக்கிறது நம் தமிழ் சினிமாவில் என்று யோசித்தால் இப்போது எவ்வளவு முன் நகர்திருக்கிறோம் என்று தெரிகிறது. கடந்த 2 – 3 ஆண்டுகளுக்குள் வந்துள்ள நல்ல படங்களின் விகிதம் தமிழ் சினிமாவிற்கு மிக நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை சுட்டுகிறது. (அதாவது ஏ.வி.எம் மீண்டும் ஒரு பெரிய பட்ஜட் மசாலா படம் ஒன்றை தயாரிக்காதிருந்தால்…)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வேளை நிகழ்ந்துவிட்டால்… என்று வைத்துக்கொள்வோம். தோனிக்கு கட் அவுட் வைத்து பால்/பீர்/காசு/துண்டு காகித அபிஷேகம், இளைய சிங்கம் பத்ரிநாத் நற்பணி மன்றம்….. நிகழலாம். சினிமா வேறு ஏதோ ஒன்றிற்கான வடிகால் என்று தான் தோன்றுகிறது. இது இல்லையென்றால் வேறு ஒன்று. தமிழர்களுக்கு எந்த அளவிற்கு மாறுதல் வரும் என்று தெரியவில்லை. மீண்டும் 7 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியே நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டு ஊர்கதை பேசும் குடும்பத்தலைவர்கள், ஓடிப்பிடிச்சி, கண்ணாம்மூச்சி ஆடும் பொடிசுகள் உருவாகலாம். (பெண்களை நெடுந்தொடர்களிலிருந்து பெயர்த்தெடுத்தல் நிகழும் என படவில்லை).

நான் அழைக்கும் நால்வர் :

முபாரக்
மஞ்சூர் ராசா
அய்யனார்
ஆசிப்
லக்ஷ்மன் ராஜா

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “தமிழ் சினிமா – சில கேள்விகள்.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s