மூலம் : ஓ. வி. விஜயன்
*******
அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!”
அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!”
“போதவிரதா!”
தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர் அழைத்தார், தோழர்கள் அழைத்தனர். அப்போதெல்லாம் அவன் பதில் கூறினான், “இதோ வந்துவிட்டேன்!”
மனைவி அழைத்தாள், மகன் அழைத்தான், மகள் அழைத்தாள், அவருடைய மக்கள் அழைத்தனர். அந்த அழைப்புக்களனைத்தும் போதவிரதனின் அறிவை மேலும் பலப்படுத்தின – நான்!
ஒவ்வோர் இரவும் உறக்கத்திற்கு முன்பான கடைசி சிந்தையாக இது இருந்தது. இதுவே நான்.
இரவினைப் பகலும் பகலினை இரவும் பின்தொடர்ந்தன. நாட்கள் செல்லச்செல்ல இந்த சிந்தை போதவிரதனுக்கு பழக்கமான ஒன்றாக மாறியது.
இறுதியில் ஓர் இரவு மற்ற இரவுகளினின்று வேறுபட்டதென போதவிரதன் அறிந்தான். வெளியே புதரில் இருந்து அசாதாரணமான ஓர் குரல் அழைத்தது.
“போதவிரதா!”
போதவிரதன் பதிலேதும் கொடுக்கவில்லை.
இவ்விரவு விடியாதா என காத்திருந்தான். இரவு விடியவில்லை. புதரிடையே இருந்து அந்தக் குரல் மீண்டும் அழைத்தது.
சிலந்தி வலையினை போன்ற பட்டு நூல் போதவிரதனை சுற்றியது. அறுத்தெரிய முயன்று தோற்றான். புதரில் இருந்த அந்த அறிமுகமற்ற மனிதன் நூலினைப் பற்றி இழுக்க, தடுக்க வழியின்றி போதவிரதனும் புதரினுள் நுழைந்தான்.
நடுக்கத்துடம் போதவிரதன் அவனிடம் கூறினான் “இது நான் இல்லை”
அம்மனிதன் கனிவோடு சிரித்தான்.
“அதை புரியவைக்கவே உன்னை இங்கு அழைத்தேன்.”
**********
தமிழில் : சித்தார்த்