பிரிவுகள்
இலக்கியம் சமூகம்

பாரதி நினைவுகள்

நான் சென்னையில் இருந்த சமயம் எப்போதாவது பேச்சுநடுவே, “இரண்டும் பெண் குழந்தைகள். கையில் வந்த பிள்ளைக் குழந்தையோ போய்விட்டது” என்று சலித்துக் கொள்வதைப் பாரதி கேட்டுவிட்டால் போதும்; “பெண் குழந்தைகளுக்குத்தான் வாத்ஸல்யம் அதிகம், யதுகிரி. புதுச்சேரியில் விளையாடின நீ என்னை இன்னும் அப்படியே காண்கிறாய். ஆனால் உன் அண்ணன் சாமிக்கு சம்சாரக் கவலை; உன்னைப்போல என்னிடம் பேச ஒழிவதில்லை” என்பார்.

நான் யுகாதிவரை சென்னைப் பட்டிணத்தில் இருந்தேன். பாரதியார் தினம் எங்கள் வீட்டுக்கு வருவார். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா அடிக்கடி வருவார்கள். நாங்களும் அடிக்கடி போவோம்.

சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதி வந்திருந்தார். க்ஷேமலாபங்கள் விசாரித்துவிட்டு, எங்கள் வீட்டு வாசலிலே க்ஷவரம் செய்துகொண்டார். “இன்று க்ஷவரத்துக்கு நாள் நன்றாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்துகொண்டேன்” என்றார்.

அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பாரதி மறுபடி வந்தார். நான் நமஸ்கரித்து, ” எங்கள் ஊர்பக்கம் (பங்களூருக்கு) நீங்கள் வருவதில்லையா?” என்று கேட்டேன். அவர், “எனக்கு பங்களூரில் என்ன அம்மா காரியம்? போய்வா அம்மா. நீ மறுபடி வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ! உன்னை மறுபடி பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்” என்றார். அதுவே அவரை நான் கண்ட கடைசித் தடவை.

நான் மைசூரில் இருந்தேன். என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “பாரதியார் இறந்துவிட்டார்!” என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.

விதி முடிந்துவிட்டது! தமிழ்நாட்டின் அதிருஷ்டம் அவ்வளவுதான்!

1923-ம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னை பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை காண எனக்கு வருத்தமாயிருந்தது.

செல்லம்மா, “யதுகிரி, அவர் பிராணன் போகும்முன்கூட, ‘செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்?’ என விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாக சொன்னேன். ‘எவ்வளவு குழந்தைகள்?’ என்று கேட்டார். ‘நம்மைப்போல இரண்டு பெண்கள்’ என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும்போல இருப்பதாக சொல்லிவிட்டு, ‘அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும்… காலை சமைத்து விடு, எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு போகவேணும்” என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் உயிர் போய்விட்டது! என்ன செய்வேன்! அதுவும் ஒரு கூத்தாகிவிட்டது…! என்றார்

**

– யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகத்தில் இருந்து (பக் : 93)

யதுகிரி, புண்ணியம் செய்த ஆத்மா. பாரதியின் பல கவிதைகளை முதலில் கேட்ட செவி இவருடையது. பாரதியின் நண்பரான மாண்டையம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸசாரியாரின் மகள் தான் யதுகிரி. பாரதியுடனான தனது அனுபவங்களை இவர் “பாரதி நினைவுகள்” என்ற புத்தகமாக எழுதினார். என் அளவில் செல்லம்மாள் எழுதிய “பாரதி சரித்திரத்தை” விட இது மிக அழகான, முக்கியமான புத்தகமாக படுகிறது. செல்லம்மாளின் புத்தகத்தின் நான் அதுவரை கண்ட கேட்ட பாரதியையே காண முடிந்தது. அதாவது, எழுத்தின் மூலமாக நமக்கு காணக்கிடைக்கும் பிம்பத்தினை சற்றும் குலைக்காத வகையில் எழுதப்பட்ட நூல் செல்லம்மாவின் “பாரதி சரித்திரம்”. ஆனால் யதுகிரியின் “பாரதி நினைவுகள்” அப்படியல்ல. பாரதியை அவனது காவிய உயரத்திலும் சாதாரணத் தளத்திலும் ஒருசேர நிற்கவைக்க முயலும் படைப்பு இது. மேலும் பாரதியின் பல பாடல்கள் உருவான கணத்தையும் பதிவு செய்த புத்தகம்.

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

6 replies on “பாரதி நினைவுகள்”

நன்றி சித்தார்த்.
அருமையான நினைவுப் பதிவு.
டி.வி யிலும் ரேடியோவிலும்
மட்டுமே காண முடியும் பாரதியை வருடத்தில் இரு நாள்.
பிறந்த, மறைந்த நாட்கள்.
இந்தப் புத்தகத்தை பற்றி நீங்கள் எழுதியதால் நினைக்கும்போதெல்லாம் பாரதியைப் படிக்கவும் முடியும்.
வாழ்த்துக்கள்.

சித்தார்த்,
நல்ல பதிவு. பாரதியின் நிழல் புத்தகம் எப்போது வெளிவந்தது.? அப் புத்தகத்தை வாங்கக்கூடிய விற்பனை முகவர்களின் தொலைபேசி இலக்கத்தைத் தந்துதவ முடியுமா?

ரேவது மற்றும் வெற்றிக்கு நன்றிகள் பல….

வெற்றி “பாரதி நினைவுகள்” புத்தகத்தை நான் இரு வருடங்களுக்கு முன்பு (அல்லது சென்ற வருடம், சரியாக நினைவில்லை) ஹிக்கின்பாத்தம்ஸில் வாங்கினேன்.

பாரதி நினைவுகள் – யதுகிரி அம்மாள்
சந்தியா பதிப்பகம்

tamilnathy -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி