பிரிவுகள்
திரைப்படம்

ராஷோமான்

“உன் உண்மைக்கும் என் உண்மைக்கும் நடுவே தான் எங்கேயோ நிஜமான உண்மை ஒளிந்திருக்கிறது”

– இந்திரா பார்த்தசாரதி (அக்னி நாவலில்)

 

உண்மை என்பது பன்முக தன்மை கொண்டது. இருவர் பார்க்கும் ஓர் நிகழ்வு இரு
வேறு உண்மைகளாகவே பதிவாகிறது. உண்மையின் இத்தன்மையை பற்றிய ஆராய்ச்சி தான் ரஷோமான். ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா 1950ஆம் ஆண்டு இயக்கிய  படம். 1952ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்று ஐரோப்பிய/அமெரிக்க  ரசிகர்கள் ஜப்பானிய திரைப்பட உலகிற்குள் நுழைய வழிவகுத்த படம்.

உண்மை என்பது பன்முக தன்மை கொண்டது. இருவர் பார்க்கும் ஓர் நிகழ்வு இருவேறு உண்மைகளாகவே பதிவாகிறது. உண்மையின் இத்தன்மையை பற்றிய ஆராய்ச்சி தான் ரஷோமான். ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா குரோசாவா 1950ஆம் ஆண்டு இயக்கிய  படம். 1952ஆம் ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்று ஐரோப்பிய/அமெரிக்க  ரசிகர்கள் ஜப்பானிய திரைப்பட உலகிற்குள் நுழைய வழிவகுத்த படம். இப்படத்தின் பாதிப்பை பல பிற்கால படங்களில் பார்க்க முடியும். சிவாஜி/பண்டரி பாயின் “அந்த நாள்” முதல் கமலின் விருமாண்டி வரை. ஆங்கிலத்திலும் “courage under fire” போன்ற பல படங்கள் இதன் யுக்தியை பயன் படுத்தியுள்ளன. சரி , அப்படி என்ன யுக்தி? ஒர் நிகழ்வை பல கண்களின் மூலம் காண முனைவது. இது தான் பன்முக பார்வை (multiple points of view ) என்ற அந்த யுக்தி.

அடை மழை பெய்யும் ஓர் நாள் சிதிலமடைந்த அந்த மண்டபத்தில் ஒதுங்குகின்றனர்  விவசாயியும் புத்த பிக்குவும். விவசாயியின் மனம் சஞ்சலத்தில்
இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த சில விஷயங்கள், அவனுக்கு மனித மனதை
பற்றிய சந்தேகங்களையும் பயங்களையும் ஏற்படுத்திவிட்டன. “எனக்கு மனிதனை
புரியவில்லை” என்கிறான் விவசாயி.சஞ்சலத்தில் இருக்கிறது பிக்குவின் மனம். அபோது மூன்றாவதாய் ஓர் ஆள் அங்கு வந்து சேர, அவனிடம் இவர்கள் சொல்வதாய் விரிகிறது கதை.

 ஓர் திருடனால் கணவன் கொலைசெய்யப்பட்டு மனைவி கற்பழிக்கப்படுகிறாள். இதை ஒரு வழிப்போக்கன் (விவசாயி) பார்க்கிறான். ஆக கணவன்/மனைவி/
திருடன்/வழிப்போக்கன் என நான்கு சாட்சிகள், நடந்தவற்றிற்கு (கணவன்
ஆவியுலகத்திலிருந்து). நால்வரும் தாங்கள் பார்த்த நிகழ்வுகளை தாங்கள்
பார்த்த விதத்தில் கூறிகின்றனர். அவர்கள் பொய் சொல்லவில்லை (அவர்களை
பொருத்த வரை). ஆனால் இந்நால்வரின் கூற்றும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.

இப்படத்தின் கதையை இப்படி விளக்குகிறார் அகிரா குரோசாவா :

“மனிதர்கள் தங்களுக்கு தங்களே நேர்மையாக இருப்பதில்லை. பொய்பூச்சு
இல்லாமல் தங்களைப் பற்றிப் பேச முடிவதில்லை. அத்தகைய மனிதர்களை பற்றி இத்திரைக்கதை பேசுகிறது. உண்மையில் எப்படி இருக்கிறார்களோ அதை விட உயரமாக உணர பொய்கள் அவசியமாகின்றன. பொய்களற்று வாழ முடியாத வகையினர், கல்லறைகளைச் சென்றடைந்த பின்னரும்பொய்மையைப் போற்ற வேண்டிய நிர்பந்தத்திலிருப்பதை இத்திரைப்படம் காட்டுகிறது”

(இப்படத்தின் திரைக்கதை புரியவில்லை என கூறிய துணை இயக்குனர்களுக்கு
படப்பிடிப்பின் போது அகிரா கூறிய விளக்கம்)

படத்தின் முடிவில் மனித மனம் பொய்களின், இச்சைகளின் குவியல் என்ற
முடிவிற்கு நாம் செல்ல எத்தனிக்கும்  கணம், மனித மனதின் மிக உன்னதமான ஓர் நிலையை நமக்கு காட்டி படத்தை முடிப்பார். நான் பார்த்த மிகச்சிறந்த கடைசி
காட்சிகளில் இதுவும் ஒன்று.

ஒரே நிகழ்வு நான்கு விதமான சொல்லப்படுவதனால், நடிகர்களும் ஒவ்வோர்
முறையும் தங்கள் குணங்களை மாற்றியபடியே இருக்க வேண்டும். இதை அனைவருமே நன்கு செய்திருக்கிறார்கள். குறிப்பாக திருடனாய் நடித்த தொஷீரோ
மிஃபூனேவும் விவசாயியாக நடித்த தகாஷி ஷிமூராவும் (இகிருவின் கதாநாயகன்).

இகிருவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த அகிராவின் திரைப்படம் இது.
அகிராவிற்கு பேசா படங்களின் மீது அதீத மோகம். பேசா படத்தில் இருந்த ஏதோ
ஒரு செய்நேர்த்தியை பேசும் படத்தில் தொலைத்து விட்டோம் என அவர்
கருதினார். அக்குறையை போக்கவே இப்படத்தை கிட்ட தட்ட பேசாபடத்தின்
அழகியலோட எடுத்தார் அகிரா. வசனங்கள் மிக குறைவு. துணை எழுத்துக்கள்
இல்லாமலேயே படம் உங்களுக்கு முக்கால் பாகம் புரியும். கடைசி காட்சிகளில்
மட்டுமே வசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வெளிவந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் உலக
திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த படங்களின் வரிசையில் உள்ளது ரஷோமான்.
படம் : ரஷோமான்
மொழி: ஜப்பானிய மொழி
ஆண்டு: 1950
இயக்கம்: அகிரா குரோசாவா
பி.கு:

ரஷோமான் என்றால் பிரம்மாண்டமான கோட்டையின் வாயில் என பொருளாம்.
(ரஷோ – கோட்டையின் வெளிப்பகுதி / மான் – வாயில்.)

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “ராஷோமான்”

//படத்தின் முடிவில் மனித மனம் பொய்களின், இச்சைகளின் குவியல் என்ற
முடிவிற்கு நாம் செல்ல எத்தனிக்கும் கணம், மனித மனதின் மிக உன்னதமான ஓர் நிலையை நமக்கு காட்டி படத்தை முடிப்பார். நான் பார்த்த மிகச்சிறந்த கடைசி
காட்சிகளில் இதுவும் ஒன்று.//
yes indeed

கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப் » Rashomon -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி