“இதோ தெரிகிறதே, இது தான் நமது கதாநாயகனின் ஈரலின் எக்ஸ்.ரே. இவருக்கு புற்றுநோய். மிஞ்சிப்போனால், இன்னும் ஆறு மாதங்கள். அதற்கு மேல் தாங்காது.”
இப்படி தான் தொடங்குகிறது அகிரா குரசோவாவின் ஜப்பானிய படமான “இகிரு”. இகிரு என்றால் வாழ்தல் என்று அர்த்தம். 1952ஆம் ஆண்டு வெளிவந்தது. கதாநாயகன் அறுபது வயதான வத்தனாபி. ஒரு அரசு அதிகாரி. தனது மேஜையின் விளிம்பை விட்டு அகலாத பார்வை. யார் எதை கேட்டாலும் “அதோ அந்த டேபிள்” என்னும் அந்த அக்மார்க் அரசு அலுவலக தாரக மொழி. எதுவும் மாற்றமில்லை. கடந்த நாற்பது வருடங்களாக இதை தான் செய்துக்கொண்டிருக்கிறார் வத்தனாபி. இன்னும் ஆறு மாதம் தான் உயிர் இருக்கும் என தெரிந்த பின்பு அந்த மனிதனில் நிகழும் மாற்றங்கள் தான் கதை.
கச்சிதமான இயக்கம். அகிரா படங்களில் காற்று கூட அவரை கேட்டு தான் வீசும். அவ்வளவு கச்சிதம். “ஏழு சாமுராய்கள்” என்ற குரசாவிவின் புகழ்பெற்ற படத்தில் இந்த கச்சிதம் புற விஷயங்களில் வெளிபட்டிருக்கும். கத்தி, காற்று , சூரிய ஒளி என எல்லாவற்றையும் நடிக்க வைத்துருப்பார். ஆனால் இகிரு அகம் சார்ந்த படம் என்பதால் இந்த கச்சிதம், காட்சி அமைப்பிலும், முகபாவங்களை கொண்டு காட்சியை விளக்கும் விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரு காட்சிகள். ஒன்று தான் இறக்கப்போவதை வத்தனாபி மருத்துவமனையில் அறிந்துகொள்ளும் காட்சி. மற்றது, தனது மிச்ச வாழ்நாளை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென அவர் முடிவு செய்யும் காட்சி. இரு காட்சிகளிலும் வெறும் முகபாவனை மட்டுமே முழு விஷயத்தையும் விளக்கிவிடும்.
தனது வாழ்கைக்கு ஓர் அர்த்ததை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து ஓர் குடியிருப்பு பகுதியின் முன் இருக்கும் சாக்கடையை அகற்றி, அங்கு ஓர் பூங்கா அமைக்க வேண்டுமென முடிவு செய்கிறார். அடுத்த காட்சி ஆறு மாதங்களுக்கு பிறகு அவரது பத்தாம் நாள் காரியத்தன்று. அவரது சக ஊழியர்கள், மேலதிகாரிகள், தொழிற்சங்க தலைவர்கள் அனைவரும் கூடியிருக்க, அவரை பற்றிய விவாதம் சாகியோடு (ஜப்பானிய மதுவகை) தொடங்குகிறது. அங்கிருந்து கதை முன்னும் பின்னும் நகர்கின்றன. வித்தியாசமான காட்சி அமைப்பு இது. திறமையாக கையாண்டிருந்தார் அகிரா.
வத்தனாபியாக நடித்தவர் ஜப்பானிய நடிகரான தகாஷி ஷிமூரா. அருமையான நடிகர். அகிரா குரசோவாவின் எல்லா படத்திலும் இவர் இருப்பார் போல. நான்கு படங்கள் பார்த்துவிட்டேன். அதில் மூன்றில் இவர். “ஏழு சாமுராய்களில்” இவர் தான் சாமுராய் கூட்டத்தின் தலைவர். அடக்கமான, அதே சமயம் தீர்க்கமான பாத்திரம் இவருடையது அதில். ஆனால் இகிருவில் அதற்கு நேர் எதிர்.வாழ்வில் ஓர் தெளிவற்ற பாத்திரம். ஆனால், தெளிவு வந்தபிறகு, சாவுக்கே பயப்படவில்லை, உனக்கா பயப்படுவேன்? என்பதை போன்ற ஓர் அழுத்தமான தோரணை. Underplay என்பார்களே அதன் உச்சம்.
கட்டாயம் டிவிடியை தேடி பிடித்து பாருங்கள்.
ஏழு சாமுராய்களை பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்.
படம் : இகிரு.
வருடம் : 1952
மொழி : ஜப்பானிய மொழி
இயக்குனர் : அகிரா குரோசாவா
நடிப்பு : தகாஷி ஷிமூரா மற்றும் பலர்.
3 replies on “இகிரு”
[…] அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: அங்கெங்கினாதபடி […]
Regarding ikiru, கீத்துக்கொட்டாய் பயாஸ்கோப் saar posted a lengthy discourse 😉
Takashi Shimura looked like ‘Major’ Sundararajan, but never repeated any sentence twice, first in English and then in Tamil or vice versa 😉
[…] சம்பந்தமில்லாமல்: இகிரு « அங்கிங்கெனாதபடி […]